முருகன் கெட்டப் பிடிக்கவில்லை.. ரொம்ப வெட்கப்பட்டார் சூர்யா... மனம் திறந்த ஒளிப்பதிவாளர் !
சென்னை : சூர்யாவுக்கு முருகன் வேடம் போடபிடிக்கவில்லை என்று எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு கூறியுள்ளார்.
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் 10ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், சரண்யா பொண்வண்ணன், வினய், சிபி சக்கரவர்த்தி, தேவதர்ஷினி என பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

எதற்கும் துணிந்தவன்
பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா கண்ணபிரான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியும் பெண்களை மதிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகள் பிறந்தால் பனை மரம் நடுவது, பெண்களுக்காக விழா எடுப்பது என படம் முழுக்க பெண்களை போற்றும் வகையில் உள்ளது.

படம் அல்ல பாடம்
காதல் என்ற பெயரை சொல்லி ஏமாற்றப்படும் பெண்கள் இந்த சமுதாயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், அதே போல ஆண் குழந்தைகளின் பெற்றோர் பெண்களை மதிக்க கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும் என்ற பாடத்தையும் இப்படம் சொல்லி உள்ளது. இந்த படத்திற்கு பெரும்பாலான ஊடகங்கள், யூடியூப் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்ததை அடுத்து இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

சூர்யா விரும்பவில்லை
இந்நிலையில், இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள உள்ளம் உருகுதய்யா பாடலுக்கு சூர்யா போட்ட கெட்டப் குறித்து பலவிதமான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, சூர்யாவுக்கு முருகன் கெட்டப் போடுவதில் உடன்பாடு இல்லை. முருகன் வேடம் போடனுமானு கேட்டார், ஆனால், இயக்குநர், ஹீரோயின் முருகன் பக்தர் என்பதால், அது நன்றாக இருக்கும் என்று இயக்குநர் விரும்பினார்.

வெட்கப்பட்டார்
இயக்குநர் விரும்பியதால் அவருக்கு மரியாதை கொடுத்து சூர்யா அந்த கெட்டப்பை போட்டார். ஆனால், கிளீன் ஷேவ் பண்ணிக்கொண்டு அந்த வேடத்தை போட்டபோது மிகவும் வெட்கப்பட்டார். சூர்யாவைத் தவிர மற்ற எந்த நடிகராக இருந்தாலும் அந்த வேடம் போட்டு இருக்க மாட்டார்கள். ஆனால், சூர்யா இயக்குநர் மீது இருந்த மரியாதை காரணமாக முருகன் வேடத்தை போட்டு பாடலில் அழகாக நடித்திருந்தார் என்று ஒளிப்பதிவாளர் ரத்னவேலு கூறினார்.


Click it and Unblock the Notifications











