Ethir Neechal Marimuthu - வலி வந்து எச்சரிக்குது.. ஏதோ கெட்டது நடக்கப்போகுது.. முன்னமே சொன்ன மாரிமுத்து
சென்னை: Ethir Neechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) தனக்கு நெஞ்சு வலி வந்து எச்சரிக்கை செய்கிறது என்று எதிர்நீச்சல் மாரிமுத்து ஏற்கனவே கூறியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
கவிப்பேரரசு வைரமுத்துவிடம் மூன்று வருடங்கள் உதவியாளராக இருந்தவர் மாரிமுத்து. அடிப்படையில் கட்டட பொறியியல் படித்த மாரிமுத்து தமிழ் மீதும், கலை மீதும் இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சினிமாவில் நுழைந்தவர். வைரமுத்துவிடம் 1989,1990,1991 ஆகிய மூன்று வருடங்கள் உதவியாளராக இருந்துவிட்டு உதவி இயக்குநராக மாறியவர்.

உதவி இயக்குநர் டூ இயக்குநர்: அதனையடுத்து இயக்குநர் வசந்த்திடம் ஆசை, ரிதம் உள்ளிட்ட நான்கு படங்களிலும், எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி, குஷி உள்ளிட்ட படத்திலும், சீமானிடம் பாஞ்சாலங்குறிச்சி படத்திலும், ராஜ்கிரணிடம் அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய படங்களிலும் உதவி இயக்குநராக பணியாற்றினார் மாரிமுத்து. உதவி இயக்குநராக இருந்துவிட்டு பிரசன்னா, வடிவேலு, உதயதாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான கண்ணும் கண்ணும், விமல், அனன்யா நடிப்பில் உருவான புலிவால் உள்ளிட்ட படங்களையும் இயக்கியிருக்கிறார்.
நடிப்பில் அட்டகாசம் : ஒருகட்டத்தில் இயக்கத்திலிருந்து ஒதுங்கிய மாரிமுத்து மிஷ்கின் இயக்கத்தில் உருவான யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே மாரிமுத்துவின் நடிப்பு அனைவரையும் ஈர்க்க நடிப்பதற்கு அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட மாரிமுத்து தனது எதார்த்த நடிப்பில் ஜொலித்தார்
குறிப்பாக பரியேறும் பெருமாள், மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு பெரிதும் கொண்டாடப்பட்டது. கடைசியாக அவரது நடிப்பில் ஜெயிலர் வெளியானது. மேலும் இந்தியன் 2, கங்குவா உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன.
ஆதிகுணசேகரன்: சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கினார் மாரிமுத்து. எதிர்நீச்சல் நாடகத்தில் அவர் ஏற்றிருந்த ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானது. இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்தார். அதுமட்டுமின்றி ஒரு சீரியல் நடிகரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்ஸ் அதிகம் கொண்டாடியதும் மாரிமுத்துவைத்தான்.
ஏற்கனவே சொன்ன மாரிமுத்து: இந்தச் சூழலில் மாரடைப்பு காரணமாக அவர் இன்று உயிரிழந்தார். அது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் எதிர்நீச்சல் நாடகத்தின் ஒரு சீன் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அதாவது அந்த நாடகத்தில் காரில் சென்றுகொண்டிருக்கும் மாரிமுத்து தனது தம்பி கதிரிடம்,
"வலி வந்து அழுத்துது. அப்பப்ப வருது. அது உடம்புல வர வலியா இல்ல மனசுல வர வலியானு தெரியல. அப்பப்ப வலி வந்து ஏதோ எனக்கு எச்சரிக்கை கொடுக்குதுனு நினைக்கிறேன். ஏதோ கெட்டது நடக்கப்போகுதுனு சொல்லுது. நெஞ்சு வலி வந்து அப்பப்ப மணி அடித்து எச்சரிக்கை செய்யுது" என பேசுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தனக்கு நேரப்போகும் விஷயத்தை நாடகத்திலேயே பேசியிருக்கிறார் மாரிமுத்து என கூறி அதிகம் ஷேர் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











