முட்டாள் தனத்தின் உச்சம்.. அப்பா சொன்னது உண்மை.. விவாதத்திற்கு ரெடி.. தில்லாக கூப்பிட்ட மகன்!
சென்னை: அப்பா சாமி இல்லை என்று சொன்னதால்தான் இறந்துவிட்டார் என்று பேசுவதை கேட்கும் போது முட்டாள் தனத்தின் உச்சம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது என மாரிமுத்துவின் மகன் தெரிவித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து.
இந்த சீரியலில் இவர் பேசும் வசனமான இந்தம்மா ஏய்... சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. இவரை பலரும் கொண்டாடி வந்தனர்.

மாரிமுத்து: இதையடுத்து, செப்டம்பர் 9ந் தேதி காலை எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசிய போது மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் தனது காரிலேயே மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக்கொண்டு இருக்கும் போதே, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இறுதி சடங்கு: அவரது உடலானது சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சென்னையில் இருந்து அவருடையை சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பசுமலை தேரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது. இவரது மரணம் திரைத்துறையினரை மட்டுமில்லாமல் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சாமி இல்லை: மாரிமுத்து கடைசியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்களிடையே வாக்குவாதம் செய்திருந்தார். அதில், நான் பத்தாவது படிக்கும் போதே ஜாதகத்தை கிழித்துப் போட்டேன், கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று பேசி இருந்தார். மாரிமுத்து சாமி இல்ல என்று பேசியதால் தான் இறந்துவிட்டதாக செய்தி பரவியது.
முட்டாள் தனத்தின் உச்சம்: இந்நிலையில்,மாரிமுத்துவிற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாரிமுத்துவின் மகன் அகிலன், அப்பா சாமி இல்லை என்று சொன்னதால் தான் இறந்துவிட்டதாக சொல்வதை கேட்கும் போது, இது முட்டாள் தனத்தின் உச்சம் என்றுதான் தோன்றுகிறது. அப்பா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை, அதை திரும்ப பெறமாட்டேன். இதனால் தான் நடந்துச்சு என்றால் அது தொடர்பான விவாதத்திற்கு போகவும் நான் தயாராக இருக்கிறேன் என்று மாரிமுத்து மகன் அகிலன் கூறினார்.


Click it and Unblock the Notifications











