எனது தந்தை எனக்குள் இறங்கியிருக்கிறார்.. அதுதான் ஆதி குணசேகரன்.. கலங்க வைத்த மாரிமுத்துவின் பேட்டி
சென்னை: Ethir Neechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) எதிர்நீச்சல் சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சூழலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் குறித்து அவர் ஒரு பேட்டியி பகிர்ந்திருந்தார்.
வசந்த், எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. அதுமட்டுமின்றி பாடலாசிரியரான வைரமுத்துவிடமும் சில வருடங்கள் பணியாற்றினார். அதன் பிறகு கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பைப் பெற்றன. அதனையடுத்து மிஷ்கினின் வற்புறுத்தலின்பேரில் யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார்.

சிறந்த குணச்சித்திர நடிகர்: யுத்தம் செய் படத்துக்கு பிறகு வரிசையாக பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் மாரிமுத்து. சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். மேலும் கமல் ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2, சூர்யாவுடன் கங்குவா உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையில் கலக்கிய மாரிமுத்து: பெரிய திரையில் இப்படி பல நடிகர்களுடன் நடித்து புகழடைந்திருந்தாலும் அவரை வெகுவாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது சின்னத்திரைதான். சன் டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரை ஏற்றிருந்தார். ஆணாதிக்க சிந்தனையுடனும், எப்போதும் திமிராகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்த அந்த கேரக்டரை மாரிமுத்து தனது நடிப்பின் மூலம் உச்சக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார்.
மரணம்: இந்தச் சூழலில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சென்னையில் இருக்கும் சூர்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் ரசிகர்கள் முதல் பிரபலங்கள்வரை இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
எனக்குள் தந்தை இறங்கினார்: இந்நிலையில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தை தான் எவ்வாறு அணுகியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் எனக்கு எளிமையாகத்தான் இருந்தது. அதனால்தான் திருச்செல்வம் என்னை தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறேன். நான் சீரியலில் நடிக்கும் உடல் மொழி என்பது எனது தந்தையின் உடல் மொழி.
அவர் விவசாயிதான். என்னை அறியாமல் அவருடைய உடல்மொழியை வாங்கிக்கொள்கிறேன். அவருடைய ஸ்லாங்தான் எனக்கும் வந்திருக்கிறது. நான் நிறைய படித்தவன். இருந்தாலும் கிராமியமும் அதுதொடர்பான வாழ்வியலும் எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. எனது அப்பாவை நான் பிரதிபலிப்பதாக நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். எனது தந்தைதான் எனக்குள் இறங்கியிருக்கிறார் என்று நினைத்துக்கொள்வேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











