நான் கல் நெஞ்சுக்காரன் வாழ்க்கையில் அழுததே இல்ல.. நடிகர் மாரிமுத்துவின் மறுபக்கம்!
சென்னை: இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானார். நட்சத்திர நடிகராக நடித்த நடிகர் மாரிமுத்து திரைப்படங்களை இயக்கியும் இருக்கின்றார்.
படங்களில் குணச்சித்திர நடிகராக கலக்கி வந்த மாரிமுத்து, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இன்று காலை டப்பிங் பணியை முடித்துவிட்டு காலை 8:30 மணி அளவில் வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நடிகர் மாரிமுத்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் மாரிமுத்து: இதில், தேனி மாவட்டத்தில் உள்ள வரசநாடு என்ற ஊருக்கு பக்கத்துல காடு மேடு எல்லாம் கடந்து போன வரும் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தேன். அந்த ஊரில் மொத்தமே15 வீடுகள் தான். நான் பிறந்த போது அந்த கிராமத்திற்கு கரண்ட் இல்லை, எங்கள் கிராமத்தை சுற்றி 10 கிலோ மீட்டருக்கு ஸ்கூல் இல்லை. ஒரு டீ குடிக்க வேண்டும் என்றாலும், வரசநாடுக்கு வந்து தான் டீ குடிக்கனும்.
நடந்தே வருவேன்: நான் தினமும் நடந்து வந்து பேப்பர் படிப்பேன், டீ குடிக்கக்கூட காசு இருக்காது, ஓசியில் பேப்பரை மட்டும் படிச்சிவிட்டு, தண்ணியை குடிச்சிவிட்டு மீண்டும் நடந்து ஊருக்கு போவேன். எனக்கு தமிழ் மீது இருந்த காதல், பற்று தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தி இருக்கிறது. நான் பத்தாவது படித்துக்கொண்டு இருக்கும் போதுதான் ஊருக்கு கரண்டே வந்தது.
தினமும் 30 கிலோமீட்டர் நடப்பேன்: படிப்பு மட்டுத்தான் வாழ்க்கையை மாற்றும் என்பது என் மனதில் ஆழமாக இருந்தது. இதனால், ஐந்தாம் வகுப்பு வரை வரசநாடுக்கு சென்று படித்தேன். அதன் பின் ஆறாவதில் இருந்து 10ம் வகுப்பு வரை தினமும் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படித்தேன். ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் தூரம் நடப்பேன் அதுவும் வெறும் காலுடன், அப்போது எங்கள் ஊரில் யாரும் செருப்பு போடமாட்டார்கள். நான் காலேஜ் படிக்கும் போது தான் செருப்பே போட்டேன் என்றார்.
அழுததே இல்லை: மேலும், என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் எதற்காகவும் அழுதது இல்லை, என்னை அனைவரும் கல் நெஞ்சக்காரன் என்று தான் சொல்லுவார்கள். நான் என் அப்பா இறந்த போதுக்கூட அழுதது இல்லை, ஆனால், மனசுக்குள் வருத்தம் இருந்தது இருந்தாலும், நான் அதை மனதிற்குள் வைத்துக்கொள்வேன் என்று பேசி இருந்தார். இந்த வீடியோவை இணையவாசிகள் வெளியிட்டு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











