அதிர்ச்சி.. ஜெயிலர், எதிர்நீச்சல் மாரிமுத்து காலமானார்.. ஏய் இந்தாம்மா என பிரபலமானவர் மறைவு!
சென்னை: எதிர்நீச்சல் சீரியல் மூலம் மிகப்பெரியளவில் பிரபலமான நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து காலமானார். அவருக்கு வயது 56.
சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் வில்லன் விநாயகனின் வலது கரமாக நடித்திருந்தார். சின்னத்திரை தொடர்களிலும், சினிமாக்களிலும் நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும் திரையுலகுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1966ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி தேனியில் உள்ள வருசநாடு எனும் ஊரில் பிறந்தவர் ஜி. மாரிமுத்து. சினிமாவில் எப்படியாவது இயக்குநராக வேண்டும் என்பதற்காக ஊரை விட்டு ஓடி வந்து சென்னைக்கு வந்தவர் மாரிமுத்து.
சென்னைக்கு வந்த அவருக்கு பெரிய பட வாய்ப்பு எல்லாம் கிடைக்கவில்லை. ஹோட்டலில் வெயிட்டராகத்தான் பணியாற்றினார். அதன் பின்னர் இலக்கியத்தில் அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக பாடலாசிரியர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார். அதன் பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக மாறிய நிலையில், அரண்மனைக் கிளி உள்ளிட்ட படங்களில் பணியாற்றி சினிமாவை கற்றுக் கொண்டார்.
2008ம் ஆண்டு பிரசன்னா ஹீரோவாக நடித்த கண்ணும் கண்ணும் படத்தை இயக்கி தனது இயக்குநர் கனவை நனவாக்கினார். அதற்கு முன்னதாக அஜித்தின் ஆசை படத்திலும் அசிஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. கண்ணும் கண்ணும் படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 2014ம் ஆண்டு புலிவால் படத்தை இயக்கினார்.
இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் மாறிய மாரிமுத்து அஜித்தின் வாலி, விஜய்யின் உதயா, மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடித்த பரியேறும் பெருமாள் மற்றும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மாரிமுத்து.
56 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படுமா என்றெல்லாம் மாரிமுத்துவின் ரசிகர்கள் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். எதிர்நீச்சல் சீரியலில் "ஏய் இந்தாம்மா" என அவர் பேசும் வசனங்களை வைத்தும் அவரது அட்ராசிட்டியை வைத்தும் ஏகப்பட்ட மீம்கள் பறந்த நிலையில், தற்போது எல்லாமே கண்ணீர் அஞ்சலி பதிவுகளாக மாறி உள்ளன.
சென்னையில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு வரப்படும் எனக் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











