Marimuthu: என் கணவரே எங்களை மறுபடியும் பார்க்க வந்தது போல இருந்தது.. நெகிழ்ந்த மாரிமுத்துவின் மனைவி!
சென்னை: Ethirneechal Marimuthu - எதிர்நீச்சல் தொடரில் நடித்து பிரபலமான நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து சமீபத்தில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றுக்கு தனது மகனுடன் வந்து பேட்டியளித்த மாரிமுத்துவின் மனைவி சொன்ன விஷயம் ரசிகர்களை மயிற்கூச்செரிய செய்தது.
வைரமுத்துவின் உதவியாளராக பணியாற்றி வந்த மாரிமுத்து இயக்குநர் வசந்தின் உதவி இயக்குனராக மாறி அஜித்தின் ஆசை உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

உதவி இயக்குநர் டு இயக்குநர்: அஜித்தின் வாலி படத்தில் ஒரு காட்சியில் நடித்த மாரிமுத்து இயக்குநர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார். பிரசன்னாவை வைத்து கண்ணும் கண்ணும் படத்தை இயக்கி இயக்குநராக மாறிய மாரிமுத்து புலிவால் படத்திற்கு பிறகு சினிமாவை இயக்கும் ஆசையையே விட்டுவிட்டார்.
பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்களில் மாரிமுத்துவுக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் மாரிமுத்து நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாரிமுத்து நினைவேந்தல்: இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல், மாரிமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்திய நிலையில் அதில் கலந்து கொண்ட மாரிமுத்துவின் மனைவி, மகன் மற்றும் அவரது மகள் மாரிமுத்து பற்றியும் அவரது மறைவு தங்களை எவ்வாறு பாதித்தது உள்ளிட்ட விசயங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

மாரிமுத்துவே மறுபடி வந்தது போல: மாரிமுத்துவின் மறைவு செய்தியை அறிந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர், பக்கத்து ஊரிலிருந்து ஒரு அட்டையில் எங்க வீட்டு அட்ரசை மட்டும் எழுதிக் கொண்டு என்னுடைய கணவர் இறந்துவிட்டார் என்கிற செய்தியை அறிந்து நேரில் வந்து எங்களுக்கு ஆறுதல் கூறிச் சென்றார்.
அவரைப் பார்த்ததுமே நாங்கள் அனைவரும் ஷாக் ஆகிவிட்டோம். இப்படிப்பட்ட மனிதர்களையும் என் கணவர் ரசிகராக சேர்த்து வைத்துள்ளாரா என்கிற பெருமித உணர்ச்சி தான் மிகுந்தது. மேலும், வந்தவருக்கு உணவு வழங்கி அவர் மீண்டும் ஊருக்கு செல்ல காசு கொடுத்து கூடவே ஒரு ஆளையும் அனுப்பி வைத்தேன்.
அந்த நபர் போன பிறகு எங்களைப் பார்க்க என் கணவரே அந்த ரூபத்தில் வந்து சென்றாரா என்கிற உணர்வு தான் மேலோங்கி மயிற்கூச்செறிய செய்தது என மிகவும் உருக்கமாக பேசி அனைவரையும் கண் கலங்க வைத்து விட்டார் மாரிமுத்துவின் மனைவி.
மாரிமுத்துவுக்கு பாசம் காட்ட தெரியாது. ஆனால் எப்போதுமே மனதுக்குள் குடும்பம் குடும்பம் என எங்களை மட்டும் தான் நினைத்திருந்தார். அவரது மறைவு, எப்பொழுதுமே என்னை மிகவும் வாட்டி வருகிறது என பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications











