Marimuthu: ஈடு செய்ய முடியாத ஆதி குணசேகரன் கேரக்டர்.. கண்ணீரில் சீரியல் டீம்!
சென்னை: நடிகர், உதவி இயக்குநர், இயக்குநர், சீரியல் நடிகர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து தன்னுடைய பயணத்தை உயர்ந்தி வந்தவர் நடிகர் மாரிமுத்து.
ஜெயிலர், இந்தியன் 2 என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவந்த மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதி சடங்குகள் தேனியில் உள்ள அவரது சொந்த ஊரில் நடக்கவுள்ள நிலையில், அதிகமான ரசிகர்கள் மாரிமுத்துவின் இழப்பிற்காக வேதனை தெரிவித்து வருகின்றனர்.

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த குணசேகரன் குறித்த ரசிகர்கள் கேள்வி: நடிகர், உதவி இயக்குநர், இயக்குநர், சீரியல் நடிகர் என அடுத்தடுத்த தளங்களில் தன்னை உயர்த்திக் கொண்டவர் மாரிமுத்து. கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றிய இவர் தொடர்ந்து ராஜ்கிரண் படங்களில் உதவி இயக்குநராக பயணத்தை தொடர்ந்துள்ளார். தொடர்ந்து, மணிரத்னம், எஸ்ஜே சூர்யா, வசந்த், சீமான் என முன்னணி இயக்குநர்களுடனும் உதவி இயக்குநராக இணைந்து பணியாற்றியுள்ளார். கண்ணும் கண்ணும், புலிவால் என வித்தியாசமான கதைக்களங்களில் இரு படங்களையும் இயக்கியுள்ளார்.
நடிகராகவும் உதவி இயக்குநராகவும் இயக்குநராகவும் சினிமாவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தாலும் கவனத்தை பெறாத மாரிமுத்துவிற்கு, எதிர்நீச்சல் குணசேகரன் கேரக்டர் சிறப்பான கவனத்தை பெற்றுத் தந்தது. தான் வெளியில் செல்லும் போதெல்லாம் ரசிகர்கள் தன்னுடன் புகைப்படம் எடுக்க அதிகமான ஆர்வம் காட்டுவதாகவும் உடன் வரும் தன்னுடைய மனைவியின் கர்வம் இதனால் அதிகமாவதாகவும் அவர் தனது சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
குணசேரகன் கேரக்டராகவே சமீபகாலங்களில் மாரிமுத்து பார்க்கப்பட்டார். அந்த அளவிற்கு இந்த கேரக்டர் ரசிகர்களை சென்றடையவும் அதன்மூலம் அதிகமான டிஆர்பியை பெற்று தொடர் முதலிடத்தை பெறவும் காரணமாக அமைந்திருந்தார் மாரிமுத்து. இந்தக் கேரக்டரில் போகிற போக்கில் அவர் பேசிச்செல்லும் டயலாக்குகள், அவரது உடல்மொழி உள்ளிட்ட அனைத்துமே ரசிகர்களின் அதிகமான பாராட்டுக்களுக்கு உள்ளானது.
குணசேகரன் கேரக்டருக்கு தன்னுடைய நடிப்பால் சிறப்பை சேர்த்திருந்தார் மாரிமுத்து. வில்லன் கேரக்டரின் நியாயங்களும் இந்த கேரக்டரில் அதிகமாக சொல்லப்பட்டுள்ளன. வில்லன் கேரக்டரையும் ரசிகர்கள் ரசிப்பதற்கு உதாரணமாக இந்த கேரக்டர் அமைய காரணமாக மாரிமுத்து அமைந்திருந்தார். இந்தக் கேரக்டரில் மற்ற யாரையும் அவ்வளவு எளிதில் பொருத்திவிட முடிது. ரசிகர்கள் அதற்கு மனதளவில் இடம்கொடுப்பது கடினம்தான்.
அந்த வகையில் அடுத்ததாக இந்தக் கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்ற கேள்விக்கு சீரியல் இயக்குநர் திருச்செல்வம்கூட தற்போது பதிலளிக்க முடியாமல் சென்றுவிட்டார். இந்த சீரியலில் உடன் நடித்த நடிகர்களும் இன்றைய தினம் மாரிமுத்து உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபோது கதறி அழுததை பார்க்க முடிந்தது. குணசேகரன் கேரக்டரில் யார் நடித்தாலும் அது, மாரிமுத்துவிற்கு இணையாக இருக்குமா என்று ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











