என்றென்றும் சில்க்.. எவர்க்ரீன் கனவுக் கன்னியின் நினைவு தினம் இன்று.. மறக்க முடியாத நினைவலைகள் சில!
சென்னை: எத்தனை கவர்ச்சி கன்னிகள் வருவார்கள்.. போவார்கள்.. ஆனால், எவர்க்ரீன் கவர்ச்சிக் கன்னி சில்ஸ் ஸ்மிதாவின் இடத்தை எவராலும் நெருங்கக் கூட முடியாது.
Recommended Video
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு இன்று எப்படி மர்மமாக இருக்கிறதோ? அதே போலத் தான் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டதாக சொல்லப்படும் நடிகை சில்க் ஸ்மிதாவின் மரணத்திலும் மர்மம் இருப்பதாக ரசிகர்கள் இன்னமும் சந்தேகிக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளே தொட முடியாத அளவு உச்சத்தில் இருந்தவர் சில்க் ஸ்மிதா என்பது மறக்கவும் மறுக்கவும் முடியாத ஒன்று.

24வது நினைவு தினம்
தனது வசீகர கண்களால் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என ஏகப்பட்ட பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை மயக்கிப் போட்ட காந்த கண்ணழகியின் 24வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1960ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஆந்திராவில் பிறந்த சில்க் ஸ்மிதா, சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்த நிலையில் தனது 35வது வயதில் 1996ம் ஆண்டு இதே நாளில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டது ஒட்டுமொத்த திரையுலகையும் ஸ்தம்பிக்க வைத்தது.

டச் அப் டு டாப் கேர்ள்
சினிமா உலகில் டச் அப் கேர்ளாக மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக நுழைந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. 1979ம் ஆண்டு வெளியான நடிகர் சிவக்குமாரின் வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தனது நடிப்பு, தாராள கவர்ச்சி, மயக்கும் விழிகளால் 35 வயதுக்குள் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மாயமாய் போனார்.

அப்பவே பான் இந்திய நடிகை
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 1980 முதல் 1990 வரை சில்க் ஸ்மிதா இல்லாத படங்கள் ஹிட் படங்களே இல்லை என்ற அளவுக்கு ரசிகர்களால் பார்க்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் தொடங்கி பாலிவுட் முன்னணி நடிகர்கள் படங்கள் வரை ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்தியவர் சில்க் ஸ்மிதா.

மர்ம மரணம்
அதீத குடி போதையில் தூக்கில் தொங்கிய நிலையில் நடிகை சில்க் ஸ்மிதா கண்டெடுக்கப்பட்டார். திரைத் துறையில் சுமார் 10 ஆண்டுகளில் வேறு எந்த நடிகையும் செய்ய முடியாத அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றிருந்தபோது, திடீரென ஏற்பட்ட அவரின் மரணம் பல கேள்விகளை எழுப்பினாலும், இறுதியில் எந்த ஒரு முடிவுக்கும் வராமல் தற்கொலை மரணம் என்றே முடிக்கப்பட்டது.

தேசிய விருது
நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி பாலிவுட்டில் எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்ததற்காக நடிகை வித்யா பாலன் தேசிய விருது வென்றார். சாதாரண பெண் சினிமா உலகில் வந்து சாதிக்க முடியும் என்றும், பல பிரச்சனைகளால் சாகவும் முடியும் என சினிமா உலகின் கருப்புப் பக்கங்களையும் தோலுரித்துக் காட்டியவர் நடிகை சில்க்.

எத்தனையோ பேர்
இன்றும் சில்க் ஸ்மிதாவை போல டிக்டாக் செய்வது, படங்களில் வேஷம் போடுவது என எத்தனையோ பேர் அவரது பெயரை வைத்து பிழைத்து வருகின்றனர். கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளமாக பல சோகங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு சோதனைகளை சாதனைகளாக மாற்றிய சில்க் ஸ்மிதா என்றென்றும் இந்திய ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே இருப்பார்.


Click it and Unblock the Notifications











