போன 5வது நாள் சுட்டுக் கொன்னுட்டான்.. ஆடுஜீவிதம் பார்த்து அழுதேன்.. பாதிக்கப்பட்ட சேரன் பேட்டி!
சென்னை: 90களில் மட்டுமில்லை சமீபத்தில் கூட திருப்பூரில் இருந்து சென்ற ஒரு இளைஞரை ஏமாற்றி அழைத்துச் சென்று அவன் சண்டை பிடித்து தப்பிக்க பார்த்தான்னு சுட்டுக் கொன்னுட்டாங்க இது பொய்யான கதையல்ல, சவுதிக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் துயரக் கதை என தமிழ்நாட்டில் இருந்து நஜீப் போல சவூதிக்கு ஆடு மேய்க்கும் வேலையில் சிக்கி பல சவுக்கடிகளை வாங்கித் திரும்பி வந்த சேரன் என்பவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி இருக்கிறது.
அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஆடு ஜீவிதம் படத்தை போல ஆயிரம் கதைகள் இருப்பதையும் வலிகளையும் மண்டைக்குள் ஒலிக்கச் செய்துக் கொண்டே இருக்கிறது. நிறைய சம்பாதிக்கலாம் என்கிற ஆசையை தூண்டி தான் தமிழர்களையும் மலையாளிகளையும் அழைத்துக் கொண்டு செல்கின்றனர்.

அங்கே மாட்டிக் கொண்டு அவஸ்த்தை படும்போது தான் ஆசைப்பட்டது எவ்ளோ தப்பான விஷயம் என புரியும் போது மேலும், வலி நெஞ்சை அடைக்கும் என்கிறார் சேரன்.
ஆயிரம் ஆடு ஜீவிதம் கதை இருக்கு: நஜீப் எனும் ஒரு மலையாளி மட்டும் சவுதிக்கு சென்று இந்த வலிகளை எல்லாம் அனுபவித்தார் என நினைக்க வேண்டாம். அதை விட சொல்ல முடியாத ஆயிரம் ஆடு ஜீவிதம் கதை இருக்கு. 20 வருடங்களாக ஒருத்தராவது எங்கள் வலிகளை படமாக்க மாட்டார்களா என நினைத்துக் கொண்டிருந்தேன். பிளஸ்சி பிருத்விராஜை வைத்து சொல்லியிருக்கும் படத்தை அழுது கொண்டே தான் பார்த்தேன் எனக் கூறுகிறார் தமிழ்நாட்டில் இருந்து சவுதிக்கு சென்று சிக்கிய சேரன்.

டெய்லர் வேலைக்காக சென்றேன்: சொந்தக்கார ஏஜென்ட்டுதான் அவனை நம்பித்தான் 80 ஆயிரம் பணம் கட்டி சென்னையில இருந்து மும்பைக்குச் சென்று அங்கே இருந்து சவுதிக்குப் போனேன். விமானத்தில் போகும் போது சந்தோஷமாக இருந்தது. 30 ஆயிரம் சம்பளம்னு சொன்னாங்க.. விமான நிலையத்தில் ஓனர் வந்தான் காரில் அழைத்துச் சென்றான்.
சொகுசான ஏசி கார் நல்ல வேலை என நினைத்துக் கொண்டிருந்தேன். 150 கி.மீ., கார் போனது சிட்டியை தாண்டி மலைகள் இருக்கும் இடத்துக்கு கூட்டிப்போனான். டிரைவர் தமிழ்க்காரர் தான். இரும்பு தகரம் அடைத்த கொட்டகையில் ஆடுகளை வைத்திருக்கும் இடத்திற்கு கொண்டுப் போய் விட்டவுடனே அழுது விட்டேன். கேட்ட கதையெல்லாம் உண்மையாக நமக்கே நடந்து விட்டதே சொந்தக்கார ஏஜென்ட்டே காசு வாங்கிட்டு ஏமாத்திட்டானேன்னு நினைச்சு அழுதேன். கார் டிரைவர் அழாத அடம் பிடிக்காத அப்புறம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அமைதியா வேலை செஞ்சா சம்பளம் கிடைக்கும். ஊருக்கும் சில வருடங்களில் போய் விடலாம் என்றார்.
உடம்பெல்லாம் சவுக்கடி: ஒரு நாளைக்கு உணவு ஒரு பெரிய பன்னும் 5 லிட்டர் தண்ணீரும் தான். தூங்கிட்டா பூட்ஸ் காலால் எட்டி உதைப்பான். எதிர்த்து பேசினாலோ, எஸ்கேப் ஆக நினைத்தாலோ சவுக்கடி தான். ஒரு அடி வச்சா அப்படியே வரிக்குதிரை மாதிரி கோடு விழுந்துரும். 10 அடிக்கு மேல வாங்கியிருக்கேன் என சேரன் கண்ணீர் மல்க தனது சொந்தக் கதையை விவரித்துள்ளார்.
சுட்டுக் கொன்னுட்டாங்க: என்னை போல யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காக நானே ஏஜென்ட்டாக மாறினேன். பலரை சரியான வேலைகளுக்கு கொண்டு சேர்த்து இருக்கிறேன். சிலர் ஏமாந்துப் போய் தப்பான ஆட்களிடம் இப்போதும் மாட்டிக் கொள்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பாக திருப்பூர்காரப் பையன் ஒருவன் எதிர்த்து சண்டை பிடித்ததால் சுட்டுக் கொன்னுட்டானுங்க, பிணமாத்தான் வீட்டுக்கு கொண்டு வந்தோம். இன்னமும் அங்கே இந்த கொடுமைத்தான் நடக்குது என கண் கலங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











