ஐசியூவில் போராடும் இளம் நடிகர்.. மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை.. உதவி கோரும் நண்பர்கள்
சென்னை: விபத்தில் படுகாயமடைந்த இளம் ஹீரோ ஒருவர், மதுரை மருத்துவமனையில் ஒரு மாதமாக உயிருக்குப் போராடி வருகிறார்.
சங்கர் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான படம், பதினெட்டாம் படி.
மனோஜ் கே.ஜெயன், சுராஜ் வெஞ்சரமூடு, அஹானா கிருஷ்ணா, சானியா அய்யப்பன் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் கவனிக்கப்பட்டது.

நகுல் தம்பி
இதில் சோனி என்ற கேரக்டரில் நடித்திருந்தவர் இளம் நடிகர் நகுல் தம்பி. டான்ஸ் ரியாலிட்டி ஷோ மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவர். 20 வயதுள்ள இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் கடந்த மாதம் 5 ஆம் தேதி தனது நண்பர் அதித்யனுடன் காரில் மதுரைக்கு வந்துகொண்டிருந்தார்.
பேருந்து மீது மோதல்
அப்போது, மதுரை அருகே எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற கார், தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் நகுல் தம்பியும் அவர் நண்பரும் படுகாயமடைந்தனர். நகுல் தம்பிக்கு மூளை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. எலும்பு முறிவும் ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தொடர்ந்து ஐசியூவில்
இதில் நகுலின் நண்பர் ஆதித்யன் சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டார். ஆனால், நகுல் தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஐசியூவில் இருக்கும் அவர் இன்னும் கண் விழிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுவரை ரூ.7 லட்சம் வரை செலவழித்துள்ளனர்.

அஹானா கிருஷ்ணா
இன்னும் 15 நாட்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமாம். ரூ.12 லட்சம் வரை தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் நடிகை அஹானா கிருஷ்ணா அவரது நண்பர்கள் சமூக வலைத்தளம் மூலம் பணம் திரட்டி வருகின்றனர். இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளம் நடிகர் ஒருவர் இப்படி உயிருக்குப் போராடுவது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











