ஹேமா கமிட்டி.. நடிகை கொடுத்த பாலியல் புகார்.. பிரபல மலையாள நடிகர் அதிரடி கைது.. தொடங்கியது வேட்டை
திருவனந்தபுரம்: இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது ஹேமா கமிஷன் அறிக்கை. மலையாள திரையுலகில் நடிகைகள் முதல் பெண் ஊழியர்கள்வரை நடைபெறும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா கமிஷனின் அறிக்கையில் இருக்கும் அம்சங்கள் வெளியாகியிருக்கின்றன. அதன் காரணமாக கேரள திரையுலகில் பெரும் புயல் வீசிவருகிறது. இந்தச் சூழலில் நடிகர் எடவெலா பாபு மீதும் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்த சூழலில் பாபு கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகை ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு ஷூட்டிங்கை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்தார்கள் சிலர். அந்த விவகாரத்தில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதேபோல் சுனி என்பவரும் சைது செய்யப்பட்டார். அந்த விவகாரம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேமா கமிஷன்: இந்த விவகாரத்தை அடுத்து மலையாள திரையுலகில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது ; அவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று மலையாள திரையுலகிலிருந்து சில நடிகைகள் கோரிக்கையை முன் வைத்தார்கள்.அதனை ஏற்றுக்கொண்ட அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தார்.
அந்த கமிஷனில் ஹேமா தவிர்த்து நடிகை சாரதா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்சலகுமாரி ஆகியோரும் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் தீவிரமாக விசாரித்து தங்களது அறிக்கையை 2019ஆம் ஆண்டு முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். ஆனால் அந்த அறிக்கையில் என்னவிருந்தது என்பது வெளியிடப்படாமலேயே இருந்தது. அதற்கு காரணம் பலர் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் நடந்த விஷயங்களை கூறியிருப்பதாக கூறப்பட்டது. அதேசமயம் அந்த விஷயத்தை தவிர்த்து பிற விஷயங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் உரிமை ஆணையம் தெரிவித்திருந்தது.
தள்ளுபடி செய்த நீதிமன்றம்: ஆனால் ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிடவேக்கூடாது என்று தயாரிப்பாளர் ஒருவர் கேரளாவில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒருவரின் தனியுரிமையை பாதிக்காத வண்ணம் அறிக்கையை வெளியிடலாம் என்று தகவல் உரிமை ஆணையம் கூறியிருப்பதை குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது. இந்தச் சூழலில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேரளாவை சேர்ந்த 5 பேர் ஹேமா கமிஷன் அறிக்கையை பெற்று வெளியிட்டிருக்கிறார்கள். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டு: இந்த விவகாரத்தில் பலர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஜெயசூர்யா, சித்திக், முகேஷ், இயக்குநர் ரஞ்சித் என பெரிய தலைகள் எல்லாம் இதில் உருண்டுகொண்டிருக்கின்றன. இதன் காரணமாக மலையாள திரையுலகத்தில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலைதான் இருக்கிறது. அதுமட்டுமின்றி இவ்விவகாரத்தால் மலையாள திரையுலக சங்கமான AMMAவிலிருந்து மோகன் லால் விலகினார்.
எடவெலா பாபு கைது: சூழல் இப்படி இருக்க பெண் நடிகை ஒருவர், AMMA அமைப்பில் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தை நிரப்ப பாபுவின் கல்லூர் வீட்டுக்கு சென்றபோது அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எர்ணாகுளம் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனையடுத்து தொடர்ந்து விசாரணை நடந்த சூழலில் பாபு எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில் எடவெலா பாபு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











