ஜன நாயகன் படத்தில் மட்டுமில்லை பாட்டுலையும் சம்பவம் இருக்கு.. அனுமன் கைண்ட் பாடிய ராப் பாலிடிக்ஸ்!
சென்னை: நடிகர் விஜய் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் பணியாற்றிக் கொண்டு உள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலுக்குத்தான் படம் ரிலீஸ் என்றாலும், மொத்த படத்தையும் அதற்கு முன்னரே முடித்து வைத்து விட வேண்டும் என்ற மனநிலையில் படக்குழுவினர் தீயாக வேலை பார்த்து வருகிறார்கள். அடுத்த மாதம் விஜய்யின் பிறந்த நாள் வருவதால் படக்குழு தரப்பில் தரமான அப்டேட் கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து புதிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறது கே.வி.என் புரடெக்ஷன்ஸ் நிறுவனம். இந்த படத்திற்கு விஜய்க்கு சுமார் 275 கோடிகள் சம்பளமாக கொடுத்ததாக திரைத்துறை வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகிறது. இது மட்டும் இல்லாமல், விஜய் இந்த படத்துடன் அரசியலில் களமிறங்கவுள்ளதால், கடைசி படத்தின் பிசினஸ் பல மடங்கு எகிறும் எனவே, அதை கருத்தில் கொண்டுதான் விஜய்க்கு இந்த சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

விஜய் தற்போது தனது கடைசி படமான ஜன நாயகன் மற்றும் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடக்கவுள்ளதால், விரைவில் படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு, அரசியல் களத்தில் முழு கவனத்தையும் செலுத்த உள்ளார். ஜன நாயகன் படம் விஜய்யின் அரசியல் களத்திற்கு உதவும் வகையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. காட்சிகள் மட்டும் இல்லாமல் பாடல்களும் அரசியல் கூறு இருக்கும் வகையில் உருவாக்க படக்குழு முடிவெடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
அனுமன் கைண்ட் : அதற்கான வேலையில் அனிருத் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் தளபதியின் கடைசி படம் என்பதால், அவருக்கு தனது ஸ்டைலில் செண்ட்-ஆஃப் கொடுக்க வேண்டும் என தனி டிராக் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அனிருத் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் உலகப் புகழ்பெற்ற ராப் பாடகர் அனுமன் கைண்ட் ஒரு பாடல் பாடியுள்ளார் என்ற தகவலை அவரே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

ராப் பாலிடிக்ஸ்: அனுமன் கைண்ட் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்தவர். கேரளாவில் விஜய்க்கு பல லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளார்கள். அனுமன் கைண்ட் அவரது பிக் டாக் என்ற பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றவர். அனுமன் கைண்ட் சமீபத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் பேசிய போது, தான் விஜய்யின் ஜன நாயகன் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் இன்னும் பல படங்களுக்காக சென்னைக்கு அடிக்கடி வர வேண்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இவரது உலகப் புகழ்பெற்ற பிக் டாக் ராப் பாடலானது, கேரளாவில் இருக்கும் தற்காப்புக் கலையான களரியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த பாடலை வீடியோவாக பதிவு செய்ய, நிஜ மரணக் கிணற்றை உருவாக்கி ஸ்டண்ட் கலைஞர்களை கொண்டு அந்த வீடியோவை உருவாக்கினர். இந்த பாடலுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஜன நாயகன் படத்தில் அனுமன் கைண்ட் பாடிய ராப் பாடல் வரிகள் அரசியல் பாடலாக இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











