Marimuthu: அடுத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்.. அட இவரா!
சென்னை: நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் சென்னையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்துவந்த மாரிமுத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக மாறியிருந்தார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீசான நிலையில், அடுத்ததாக கமலின் இந்தியன் 2 படத்திலும் மாரிமுத்து நடித்து முடித்துள்ளார்.

மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் கேரக்டரில் கமிட்டாகும் பிரபல நடிகர்: நடிகர் மாரிமுத்து இயக்குநர், நடிகர், சீரியல் நடிகர் என பல்வேறு தளங்களில் தொடர்ந்து தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வந்தவர். கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்கள் இவரது இயக்கத்தில் வெளியானது. உதவி இயக்குநராக மணிரத்னம், ராஜ்கிரண், எஸ்ஜே சூர்யா, வசந்த் உள்ளிட்டவர்களுடன் பணியாற்றியுள்ள மாரிமுத்து, நடிகராகவும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியானது.
இந்தப் படத்தில் வில்லன் கோஷ்டியில் இருந்தாலும் ரஜினியுடன் அதிகமான காம்பினேஷன் காட்சிகள் மாரிமுத்துவிற்கு இருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடித்துவந்தார். கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ரிலீசுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படங்கள் கொடுத்த பிரபலத்தைவிட அதிகமான புகழை, சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரின்மூலம் பெற்றுவந்தார் மாரிமுத்து.
திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நெகட்டிவ் ஷேடில் இவர் நடித்து வந்தார். இந்தத் தொடர் தொடர்ந்து சேனலின் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் காணப்படுகிறது. இதற்கு குணசேகரன் கேரக்டரும் முக்கியமான காரணமாக அமைந்து வருகிறது. இந்தக் கேரக்டருக்கு தன்னுடைய இயல்பான நடிப்பால் உயிர் கொடுத்துவந்தார் மாரிமுத்து.
வில்லன் கேரக்டரையும் சிறப்பான நடிப்பால், ஆளுமையால் சிறப்பாக்க முடியும் ரசிகர்களை கொண்டாட வைக்க முடியும் என்பதற்கு மாரிமுத்துவும் முக்கியமான எடுத்துக்காட்டாக விளங்கினார். வில்லன் கேரக்டரில் இவர் இந்தத் தொடரின்மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டு வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் சீரியலின் டப்பிங்கின்போதுதான் மாரிமுத்துவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலியை வைத்துக் கொண்டு அவரே மருத்துவமனைக்கு காரை ஓட்டி சென்றுள்ளார்.
இதுவும் அவரது உயிரிழப்பிற்கு முக்கியமான காரணமாக மருத்துவர்களால் கூறப்பட்டுள்ளது. மேலும் 5 நிமிடங்களுக்கு முன்னதாக மாரிமுத்து மருத்துவமனைக்கு வந்திருந்தால் அவர் உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் கேரக்டரின் நிலை தற்போது என்னவாகும் என்ற கேள்வி நேற்றைய தினமே அனைவராலும் யோசிக்கப்பட்டது. இதுகுறித்து இயக்குநரிடமும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதுகுறித்து பேசும் நேரம் இதுவல்ல என்று திருச்செல்வம் பதிலளித்திருந்தார். இந்நிலையில் மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் கேரக்டரில் அடுத்ததாக அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேல ராமமூர்த்தி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் மற்றும் எழுத்தாளராக உள்ளவர். அவர் ஆதி குணசேரகன் கேரக்டரில் நடிப்பாரா என்பதை சீரியல் தரப்பு விரைவில் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











