பரிதாபமா இருக்குப்பா! வடிவேலுவின் மாங்காவை பஞ்சராக்கிய நடிகர்.. மாத்திரை வாங்க உதவி கேட்டு வீடியோ!
விஜயவாடா: தமிழ் சினிமா வரலாற்றில் காமெடி காட்சிகளுக்கு எப்போதும் தனி வரவேற்பே உள்ளது. அது படத்தின் கதையோட்டத்துடன் வந்தாலும் சரி, ஆடியன்ஸ்க்கு சலிப்பை தவிர்க்க சேர்க்கப்பட்டிருந்தாலும் சரி. நகைச்சுவைக் காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த காரணத்தால்தான் இங்கு ஆதித்யா, சிரிப்பொலி போன்ற நகைச்சுவை தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஜாம்பவானாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்களில் நடிகர் வடிவேலுவும் ஒருவர். வடிவேலு தனது தொடக்க காலத்தில் தனியாக கதையோட்டத்திற்கு ஏற்ற நகைச்சுவைக்காட்சிகளில் நடித்து வந்தார். அதன் பின்னர் நகைச்சுவையில் மிளிரத்தொடங்கிய வடிவேலு தன்னைச் சுற்றி சில நகைச்சுவை நடிகர்களை வைத்துக் கொண்டார். அவர்களை தான் நடிக்கும் படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்க வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

அதில் ஒருவர்தான் நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ். வடிவேலுவுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் வெங்கல்ராவ். குறிப்பாக, கந்தசாமி படத்தில் வடிவேலு தேங்காய் விற்று கொண்டு இருபபார். அவரிடம் தேங்காய் வாங்க வரும் நபராக வெங்கல்ராவ் நடித்திருப்பார். இருவருக்கும் இடையில் தேங்காய்க்கான விலை குறித்த பேரம், அதன் பின்னர் நடைபெறும் கைகலப்பு,அப்போது பேசும் மாங்காய் பஞ்சர் ஆகிடும் உள்ளிட்ட வசனங்கள் மிகவும் பிரபலமடைந்த நகைச்சுவைக் காட்சியாக இன்றும் உள்ளது. அதேபோல் சீனா தானா 007 படத்தில் தலையில் இருந்து கையை எடுத்தால் கடித்துவிடும் நோயால் பாதிக்கப்பட்ட நபராக வெங்கல்ராவ் நடித்திருப்பார். இவரிடம் வடிவேலு கடி வாங்கும் காட்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வெங்கல்ராவ்: இவர் தற்போது படங்களில் அவ்வளவாக நடிப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் கடந்த 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர், வடிவேலு சினிமாவில் இருந்து விலகி இருந்தார் மற்றும் ஓரம் கட்டப்பட்டார். இதனால் வடிவேலுவை நம்பி இருந்த வெங்கல்ராவ் போன்றோருக்கு பெரிதாக மார்க்கெட் இல்லாமல் இருந்தது.

உதவி கேட்டு வீடியோ: தற்போது சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகி ஓய்வில் இருக்கும் வெங்கல்ராவ், தனது சொந்த ஊரான விஜயவாடாவில் உள்ளார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வெங்கல்ராவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தமிழ் சினிமா நடிகர்களுக்கும் கலைஞர்களுக்கும் வணக்கம். நான் வெங்கல்ராவ் பேசுகின்றேன். நான் இப்போது பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு கை, ஒரு கால் செயலிழந்துவிட்டது. படுத்த படுக்கையாகவே உள்ளேன். பழய மாதிரி சரளமாக பேசக்கூட முடியவில்லை. மாத்திரை வாங்கக் கூட காசு இல்லை. யாராவது எனக்கு உதவினால் நன்றாக இருக்கும்" என திணறித் திணறிப் பேசியுள்ளார்.
ஃபைட்டர் வெங்கல் ராவ்: வீடியோவைப் பார்க்கும்போதே மிகவும் பரிதாபமாக உள்ளது. தமிழ் சினிமா கலைஞர்களோ அல்லது தென்னிந்திய சினிமா கலைஞர்களோ உதவினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெங்கல் ராவ் தனது சினிமா வாழ்க்கையை ஒரு ஃபைட்டராகத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











