வீர தீர சூரனில் யார் கெத்து.. விக்ரம், எஸ்.ஜே சூர்யா, சுராஜை எல்லாம்.. ஓவர் டேக் செய்தது இவர்தான்!
சென்னை: அருண் குமார் இயக்கத்தில், விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் என பலர் நடிப்பில் உருவான படம் வீர தீர சூரன் பாகம் இரண்டு. இந்த படம் நேற்று அதாவது மார்ச் 27ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் மிகப்பெரிய பலமான ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசையை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
படம் அதன் இரண்டாவது காட்சியில் இருந்து தொடங்கி கிளைமேக்ஸ் வரை நீளுகிறது. படத்தை ஒரு வட்டமாக இயக்குநர் முடித்திருந்தாலும், ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துப் போக காரணமே, விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாராவின் நடிப்பு பிரமாதமாக இருந்தாலும், அவர்களின் நடிப்பை ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக கொண்டு வந்து காட்டியது ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசைதான்.

சுராஜ் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் குரூரத்தை வெளிக்காட்டும் நடிப்பு, பகையைத் தீர்க்க அவர்கள் பேசும் கூர்மையான வசனங்கள் ஆகியவற்றின் மூலமே அவர்கள் ஸ்கோர் செய்கிறார்கிறார்கள் என்றால் அதனை தனது பின்னணி இசையில் மூலம், இரட்டிப்பாக மாற்றியுள்ளார் ஜி.வி. அதேபோல் சுராஜின் அம்மா கதாபாத்திரம்தான் முதன் முதலாக காளி என்று விக்ரமின் கதாபாத்திரத்தின் பெயரைக் கூறும்போது, அந்த காதாபாத்திரத்திற்கென உருவாக்கப்பட்ட பின்னணி இசையை ஒரு நொடி இசைக்கச் செய்தது எல்லாம் மாஸ்.

பின்னணி இசை: படம் முழுவதும் பழிவாங்கல் தான் கதையாகவும் காட்சியாகவும் இருந்தாலும் அவை இல்லாமல் படத்தில் ஆங்காங்கே வரும் காதல், பரிதவிப்பு போன்ற உணர்வுகளையும் சிறப்பாக தனது பின்னணி இசை மூலம் நிரப்பிக் கொடுத்துள்ளார். அப்படிப் பார்த்தால் ஜி.வி. பிரகாஷ் குமார் தான் படத்தில் இருக்கும் மிகப்பெரிய வீர தீர சூரன். ஜி.வி.பிரகாஷ் குமார் கடந்த சில ஆண்டுகளாகவே மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் தொடங்கி இளம் நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இவரது பாடல்கள் எந்த அளவிற்கு கொண்டாடப்படுகிறதோ, அதே அளவிற்கு பின்னணி இசையிலும் படத்திற்கு பலம் சேர்த்து வருகிறார்.

ஜி.வி. பிரகாஷ் குமார்: இவரது இசையில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை வணங்கான், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், கிங்ஸ்டன், எமர்ஜென்சி மற்றும் வீர தீர சூரன் பாகம் 2 ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. இதில் வணங்கான் மற்றும் எமர்ஜென்சி படங்களுக்கு பாடல்கள் மட்டும் அமைத்துக் கொடுத்துள்ளார். இது மட்டும் இல்லாமல், இன்னும் இரண்டு வாரங்களில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகவுள்ளது. தனுஷின் இட்லி கடை படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. கடந்த ஆண்டில் இவரது இசையில் தீபாவளிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் தமிழில் ரிலீஸ் ஆன அமரன் படமும் தெலுங்கில் ரிலீஸ் ஆன லக்கி பாஸ்கர் படமும் மாபெரும் ஹிட் படங்களாக மாறியது. இப்படி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனது இசை மூலம் முத்திரை பதித்து வரும் ஜி.வி. பிரகாஷ் குமாரை தமிழ் சினிமா இன்னும் பெருமளவிற்கு கொண்டாடவில்லை.
வீர தீர சூரன் படத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு கிராமத்துக் கதை. அப்படி இருக்கும்போதும் அதன் தன்மைக்கு, அந்த மண்ணோடு ஒன்றிப்போன இசைக் கருவிகளைப் பயன்படுத்தி இசை அமைத்துள்ளார். கடந்த ஆண்டு இவரது இசையில் வெளியான தங்கலான் படத்திற்காக, பல இசைக் கருவிகளைத் தேடித் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை வாங்கி, அதில் இருந்து இசையமைத்திருந்தார். தான் கமிட் ஆகும் ஒவ்வொரு படத்திற்கும் சிறப்பான இசையைக் கொடுக்க அவரது மெனக்கெடல் படம் பார்க்கும் போது தெரிகிறது. பேஸ் கிட்டார் மூலம் கொடுக்கும் பின்னணி இசையோ, தீம் மியூசிக்கோ மட்டும் இல்லாமல், எல்லாவகையான இசைக் கருவியிலும் தீம் மியூசிக்கை உருவாக்கும் திறமையான இசை அமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் திகழ்கிறார். சினிமாவில் நடிகராக நடிக்க வந்த பின்னர் இவரது இசை புதிய பரிணாமத்தை எட்டியுள்ளதாக, அவருடன் தொடர்ந்து பணியாற்றிய இயக்குநர் வெற்றி மாறன் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு இசையமைத்த அமரன் படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

தமிழ் சினிமா: அதற்கு காரணம், தமிழ் சினிமாவில் பொதுவாக ஒரு பழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அது எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என நடிகர்களை மையப்படுத்தி காலகட்டத்தையும் அவர்கள்தான் உச்ச நட்சத்திரம் என்று பிரிக்கும் பழக்கம் அது. அதே நேரத்தில் இசையில் எம்.எஸ்.வி, அதன் பின்னர் இளையராஜா, அதன் பின்னர் ஏ.ஆர். ரகுமான், அதன் பின்னர் யுவன் மற்றும் ஹாரீஸ் இப்போது அனிருத் என பிரித்துள்ளார்கள். ஆனால் இப்படி பிரிக்கப்பட்ட காலகட்டத்தில் பல நடிகர்கள் குறித்தும் பல இசையமைப்பாளர்கள் குறித்தும் மக்கள் பெரிய அளவில் பேசாமல் இருந்துள்ளார்கள்.

அனிருத்: இன்றைக்கும் எத்தனையோ ரசிகர்கள், எஸ்.ஏ. ராஜ்குமாரின் பாடலையோ, சிற்பி பாடலை கேட்டுவிட்டு அதனை இளையராஜா பாடல் எனக் கூறுகிறார்கள். அதேபோல் தேவாவின் பாடலையும் கார்த்திக் ராஜாவின் பாடலையும் கேட்டு விட்டு அதனை ஏ.ஆர். ரகுமானின் பாடல் வரிசையில் சேர்த்து விடுகிறார்கள். அதுபோலத்தான் இப்போதும், அனிருத் மிகப்பெரிய நடிகர்களின் படங்களுக்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு இசையமைக்கிறார். அவரது இசை மெச்சத்தகுந்த வண்ணம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பலரும் மற்ற இசையமைப்பாளர்கள் பாடலை, பின்னணி இசையை கேட்டு விட்டு அதனை அனிருத்தின் இசை எனக் கூறிவிடுகிறார்கள்.
மாற்றம்: மேலும் சினிமாவில் பல ஆண்டுகளாக இருக்கும் பலரும் கூட இந்த தவறை செய்கிறார்கள். சம காலத்தில் கதைக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து இசையமைக்கும் பல இசையமைப்பாளர்களை தமிழ் சினிமா கொண்டிருக்கிறது என்ற மனநிலைக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் வரும்போதுதான் ஜி.வி. பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் ஆதி, சந்தோஷ் நாராயணன், சாம் சி.எஸ், ஷான் ரோல்டன் உள்ளிட்ட சமகால இசையமைப்பாளர்களும் கொண்டாட படுவார்கள்.


Click it and Unblock the Notifications











