“தனுஷின் திருச்சிற்றம்பலம் புதிய மொந்தையில் பழைய கள்ளு”:அதே கதை, அதே பாணி விமர்சிக்கும் நெட்டிசன்கள்
சென்னை: தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள போதும், சில விமர்சனங்களும் எழுந்துள்ளன.

நான்காவது முறையாக இணைந்த கூட்டணி
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என அடுத்தடுத்து 3 ஜாலியான படங்களைக் கொடுத்த தனுஷ், மித்ரன் ஜவஹர் கூட்டணி, 4வது முறையாக 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இணைந்தது. முதல் 3 படங்களும் தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டன. ஆனால், திருச்சிற்றம்பலம் நேரடியாக தமிழில் எடுக்கப்படுவதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.

பிரமாண்டமாகத் தொடங்கிய திருச்சிற்றம்பலம்
சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க, தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா என பலமாக களமிறங்கியது 'திருச்சிற்றம்பலம்' டீம். கூடவே பல வருடங்களுக்குப் பிறகு தனுஷுடன் அனிருத் கை கோர்த்தார். இந்தக் கூட்டணியை பார்க்கும் போதே படம் ஜாலியாக தான் இருக்கும் என யூகிக்கப்பட்டது. அதைப் போலவே படம் முழுக்க ஜாலி கண்டெண்ட் தான்.

புதிய மொந்தையில் பழைய கள்ளு
பிரகாஷ் ராஜ்ஜின் அஜாக்கிரதையால் தாய், தங்கை இருவரும் விபத்தில் உயிரிழக்கின்றனர். இதனால், தந்தை பிரகாஷ் ராஜ் மீது வெறுப்பில் இருக்கும் தனுஷ், தாத்தா பாரதிராஜாவுடன் சேர்ந்து தண்ணி அடிக்கிறார். சுக துக்கங்கள் எதுவானாலும் தோழி நித்யா மேனனிடம் சொல்லி ஆறுதல் அடைகிறார். பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணாவிடம் காதல் சொல்லி மொக்கை வாங்கும் தனுஷ், இறுதியாக ராஷிக்கண்ணாவை மணந்தாரா? இதுதான் இந்தப் படத்தின் மீதிக் கதை.

ஒரே கதையை திரும்ப திரும்ப ரீமேக்?
படத்தில் பெரிய ட்விஸ்ட்கள் எதுவும் இல்லாமல், பரபரவென பயணிக்கிறது திரைக்கதை. ஒருவேளை ட்விஸ்ட்கள் இருந்தாலும் அது ரசிகர்களிடம் எடுபடாமல் போயிருக்கும் என இயக்குநர் விட்டுவிட்டாரா தெரியவில்லை. காரணம், இதே மாதிரியான கதைகளுக்கு தமிழில் பஞ்சமே இல்லை. முக்கியமாக தனுஷே இதே கதை பின்னணியில், இதே இயக்குநரின் இயக்கத்தில் 'யாரடி நீ மோகினி' போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனால், சலித்துப் போன ரசிகர்கள் ஒரே கதையை லேசாக மாற்றி எத்தனைமுறை ரீமேக் செய்வீர்கள் என, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

பெரியவங்களுக்கு மரியாதை எல்லாம் கிடையாதா?
அதேபோல், 'திருச்சிற்றம்பலம்' படத்தில், தனது தந்தை பிரகாஷ்ராஜை "அவன்... இவன்.." என ஒருமையில் அழைப்பதாக வசனங்கள் உள்ளன. இதே இயக்குநரின் யாரடி நீ மோகினி படத்திலும் இதுபோன்ற வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதெல்லாம் படமாக பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், தனுஷ் மாதிரியான முன்னணி நடிகர்கள் இப்படி நடிப்பது, அவரது ரசிகர்களால் எப்படி பார்க்கப்படும் என்ற கேள்வி எழுகிறது. மேலும், தாத்தா கேரக்டரில் நடித்துள்ள பாரதிராஜாவுடன் சேர்ந்து மது அருந்தும் காட்சிகளும் நெட்டிசன்களால் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இனிமேலாவது புதிய திரைக்கதை, புதிய கோணத்தில் தனுஷ் நடிக்க வேண்டும், அதிலும் இதுபோன்ற அடா புடா காட்சிகள், மது அருந்தும் காட்சிகளை தவிர்க்க கவனம்செலுத்த வேண்டும் என, அவரது ரசிகர்களே கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











