'எங்களுக்கு சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு படம் வேணும்..' சசிகுமாரிடம் கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்!
சென்னை: 'எங்களுக்கு சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு படம் வேண்டும்' என்று சசிகுமாரிடம் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா காரணமாக, சினிமா தொழில் கடந்த 6 மாதமாக முடங்கி கிடக்கிறது.
தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது.

இயக்குனர் சுசீந்திரன்
அதற்கான வழிகாட்டு விதிமுறைகளையும் அறிவித்துள்ளது. இதையடுத்து சில படங்களின் ஷூட்டிங் வேலைகள் தொடங்கியுள்ளன. இயக்குனர் சுசீந்திரன், ஜெய், ஆதி நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை திண்டுக்கல்லில் நடத்தி வருகிறார். இயக்குனர் 'குள்ளநரி கூட்டம்' பாலாஜியும் தனது அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார்.

கொரோனாவுக்குப் பிறகு
மேலும் சில படங்களின் ஷூட்டிங் கொரோனாவுக்குப் பிறகு தொடங்கி நடந்து வருகிறது. சில இயக்குனர்கள், தங்கள் படங்களின் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்கியுள்ளனர். சிலர் ஓடிடி-க்கு படங்களை விற்கும் நோக்கில் பட வேலைகளை முடித்து வருகின்றனர்.

நடிகர் சசிகுமார்
இதற்கிடையே நடிகரும் இயக்குனருமான சசிகுமார், கொரோனா காரணமாக மதுரையில் இருந்துவந்தார். இப்போது சென்னை திரும்பியுள்ள அவர், டப்பிங் பணியை தொடங்கி இருப்பதாகக் கூறியுள்ளார். இதுபற்றி இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். ஆனால், எந்தப் படத்தின் டப்பிங் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

சுப்ரமணியபுரம்
இந்நிலையில் ரசிகர்கள் அவரிடம், 'எங்களுக்கு சுப்ரமணியபுரம் மாதிரி ராவான ஒரு கேங்ஸ்டர் படம் வேணும், சீக்கிரமா படம் டைரக்ட் பண்ணுங்க சார் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இன்னும் சிலர், எங்களுக்கு இயக்குனர் சசிகுமார் திரும்ப வேணும், சீக்கிரம் படம் டைரக்ட் பண்ணுங்க என்று கூறியுள்ளனர்.

கொம்புவச்ச சிங்கம்டா
நடிகர் சசிகுமார் நடிப்பில் எம்.ஜி.ஆர் மகன், கொம்புவச்ச சிங்கம்டா, நா நா, ராஜவம்சன் ஆகிய படங்கள் வர இருக்கின்றன. இதையடுத்து அவர் மலையாளத்தில் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். ஆடுகளம் கதிரேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் மற்றொரு ஹீரோவாக யார் நடிக்கிறார் என்பதும் இயக்குனரும் இன்னும் முடிவாகவில்லை.


Click it and Unblock the Notifications











