ரஜினி வீட்டின் முன்பு குவியும் ரசிகர்கள்.. இரவு 12 மணிக்கு போயஸ்கார்டனில் கேக் வெட்டி கொண்டாட்டம்!
சென்னை: ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் அவரது வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுக்க ரஜினி மக்கள் மன்றத்தினர் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற தர்பார் இசை வெளியீட்டு விழாவிலேயே தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் ரஜினி.

ஊரில் இருக்க மாட்டேன்
மேலும் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள் என்றும் ரஜினி தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த ஆண்டும் பிறந்த நாளின் போது நான் ஊரில் இருக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் ரஜினி.

வீட்டின் முன்பு
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத ரசிகர்கள் நேற்றிரவு 12 மணிக்கே ரஜினியின் வீட்டின் முன்பு திரண்டனர். 12 மணிக்கு ரஜினியின் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியில் பிரமாண்ட கேக் வெட்டி ரசிகர்கள் பிறந்த நாளை கொண்டாடினர்.

போலீஸ் பாதுகாப்பு
மேலும் காலையில் இருந்தும் ரஜினியின் வீட்டின் முன்பு ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். இதனால் ரஜினி வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிறப்பு வழிபாடு
இதனிடையே ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











