தோப்புக்கரணம், அன்னதானம், ரத்ததானம்.. வாரிசு கொண்டாட்டம் ஆரம்பம்.. வாரிசு ரசிகர்கள் அலப்பறை!
சென்னை : தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடு, தோப்புக்கரணம், அன்னதானம் என அலப்பறை கொடுத்து வருகின்றனர்.
விஜய்யின் வாரிசுத் திரைப்படம்கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவத்தை சொல்லும் திரைப்படமாக உருவாகி உள்ளது. நடிகர் விஜய் நீண்டநாட்களுக்கு பிறகு குடும்ப செண்டிமென்ட் கதையில் நடித்துள்ளார்.
இப்படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமாரும், அம்மாவாக ஜெயசுதாவும், பிரபு,ஷ்யாம்,தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் அண்ணன்களாக நடித்துள்ளனர். விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சிறப்பு பிரார்த்தனைகளை
வாரிசு திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தளபதி விஜய் ரசிகர்கள் இந்த ஆண்டு பொங்கலை தீபாவளி போல பட்டாசுகளை வெடித்து தெறிக்கவிட தயாராக இருக்கிறார்கள். வாரிசு படம் வெற்றி பெற வேண்டி விஜய்யின் தீவிர ரசிகர்கள் வாரிசு பட போஸ்டரை கையில் வைத்துக்கொண்டு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம், அன்னதானம், தோப்புக்கரணம் என பல பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

தோப்புக்கரணம்
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் வாரிசு பட போஸ்டருடன் வந்த விஜய் ரசிகர்கள் மாயூரநாதர், அபயாம்பிகை அம்பாள் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து விநாயகர் சன்னதியில் 1000 தோப்புக்கரணம் போட்டு படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு செய்தனர்.

அன்னதானம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருத்தகிரீஸ்வரர் கோவில், அன்னதானம் வழங்கினர். இதே போன்று திருவாரூர் தியாகராஜர் கோயிலிலும் அர்ச்சனை செய்யப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கும், சாலையோரம் வசிப்பவர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தங்க மோதிரம் பரிசு
தளபதியின் வாரிசு படம் நாளை வெளியாவதை முன்னிட்டு வட சென்னை (வடக்கு) மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அயனாவரம் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.

ஆட்டோவில் போஸ்டர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்தின் சார்பில் அரவக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாரிசு படத்தின் விளம்பர போஸ்டர் மற்றும் ஸ்டிக்கர்களை ஆட்டோக்களில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது.

டாஸ் போட்டு முடிவு
அந்தமானில் துணிவு மற்றும் வாரிசு படத்திற்கு திரையரங்கங்கள் ஒதுக்கப்பட்ட தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், மூன்று அரங்குகள் கொண்ட தியேட்டர் வளாகத்தில் ஒரு அரங்கில் 'துணிவு' ஒரு அரங்கில் 'வாரிசு' என திரையிடப்பட்ட நிலையில் மூன்றாவது அரங்கில் எந்தப் படம் திரையிடப்பட வேண்டும் விஜய் அஜித் ரசிகர்கள் முன்னிலையில் டாஸ் போட்டு முடிவு செய்யப்பட்டது.

இரவு முழுவதும் பார்ட்டி
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய தலைமை சார்பில் வாரிசு பட ரிலீசை கொண்டாட ரசிகர்கள் பக்காவாக பிளான் போட்டுள்ளனர். நள்ளிரவு 1 மணி முதல் DJ PARTY, நள்ளிரவு 3 மணிக்கு வானவேடிக்கைகளுடன் விண்ணை பிளக்க தளபதியின் வாரிசு திரைப்படத்தி அதிகாலை 4 மணிக்கு காட்சியை காண ரசிகர்கள் பக்காவாக பிளான் போட்டுள்ளனர்.

இலவச டிக்கெட்
அதேபோல ரத்த தானம் கொடுப்பவர்களுக்கு இலவச வாரிசு பட டிக்கெட் வழங்கப்படும் என்று காஞ்சிபுரம் விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. நாளை வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தை திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி விட்டார்கள்.


Click it and Unblock the Notifications











