Vijay - ஏங்க விஜய் நடிகைக்கு ஒன்னுனாகூட கேட்க மாட்டீங்களா?.. இதுல அரசியல் ஆசை வேற.. ரசிகர்கள் விளாசல்
சென்னை: Vijay (விஜய்) த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு விஜய் வாய் திறக்காதது பற்றி ரசிகர்கள் சரமாரி கேள்வி எழுப்பிவருகின்றனர்.
லியோ படம் கடந்த மாதம் வெளியானது. விமர்சன ரீதியாக சரியாக போகாவிட்டாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை மொத்தம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. இதன் காரணமாக விஜய்யும், அவரது ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த வசூல் மூலம் விஜய்யின் வியாபாரம் எப்போதும் டாப்பில்தான் இருக்கும் என்று உறுதியாகியிருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

மன்சூர் அலிகான் பேச்சு: நிலைமை இப்படி இருக்க லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ரிஷாவுடன் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் கண்டிப்பாக அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும்; குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் அவரையும் தூக்கி போடலாம் என்று நினைத்தேன். 150 படங்களில் நான் பண்ணாத அட்டூழியமா. அனுமர் சிரஞ்சீவி மலையை தூக்கிட்டு சென்றது போஅல் த்ரிஷாவை விமானத்தில் கொண்டு போய் கொண்டு வந்துவிட்டார்கள். காஷ்மீரில் த்ரிஷாவை எனது கண்ணிலேயே காட்டவில்லை” என்றார்.
த்ரிஷா கண்டனம்: மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சு த்ரிஷாவின் கவனத்துக்கு சென்றதை அடுத்து அவர் தரமான பதிலடி கொடுத்தார். தனது ட்விட்டர் பக்கத்தில், “மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று எனது கவனத்துக்கு வந்தது. அவரது பேச்சினை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆணாதிக்க மனநிலை மற்றும் அவமரியாதை செய்யும் விதம், பெண் வெறுப்பை பரப்பும் வகையிலும் அவரது பேச்சு இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
குவியும் கண்டனங்கள்: த்ரிஷா மட்டுமின்றி திரையுலகிலிருந்து பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர். லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், குஷ்பூ, மடோனா செபாஸ்டியன் என அந்தப் பட்டியல் நீள்கிறது. மன்சூர் அலிகான் மீது நடிகர் சங்கம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.
விஜய் ஏன் பேசவில்லை?: இப்படி பலரும் எதிர்ப்புகளை பதிவு செய்துவரும் சூழலில் விஜய் இதுவரை வாய் திறக்கவில்லை. அது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது த்ரிஷாவுடன் விஜய் பல வருடங்களாக நடித்துவருகிறார். இருவரும் நல்ல நட்பில் இருப்பவர்கள். ஆனால் இப்படி அவர் குறித்து தன் படத்தில் பணியாற்றிய நடிகர் ஆபாசமாக பேசியிருப்பதை பார்த்தும் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.
அதுமட்டுமின்றி விஜய்யின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்துமே அரசியலை நோக்கித்தான் இருக்கிறது. அவர் அரசியலுக்கு வந்தால் ஏதேனும் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்களும் பொதுமக்களில் சிலரும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய துறையில் ஒரு நடிகைக்கு இப்படி ஒரு சம்பவம் நிகழும்போதே வாய் திறக்காதவர் அரசியலுக்கு வந்தா மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார். முதலில் தன்னுடன் பணியாற்றியவருக்கு ஒரு இன்னல் என்றால் குரல் கொடுக்கட்டும். பிறகு கோட்டைக்கு வருவதை பற்றி யோசிக்கலாம் என காட்டமாக ரசிகர்களில் ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











