'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
கோவை: ஜித்து மோகன் இயக்கத்தில் பகத் ஃபாசில் நடிப்பில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி வெளியான ஆவேசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது. மலையாள படங்கள் கேரளாவில் சக்கைப்போடு போடுவதை போலவே இந்த ஆண்டு மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் தொடங்கி தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வெற்றிநடை போட்டு வருகிறது.
தமிழ் படங்களை விட தொடர்ந்து வெளியாகும் மலையாள படங்கள் தரமாகவும் ரசிக்கும்படியும் உள்ள நிலையில், மலையாள படங்களை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களும் ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் உள்ள பிரபல தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் ஆவேசம் படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள் திடீரென ஆவேசம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பகத் ஃபாசில் மாஸ்: வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் பகத் ஃபாசில் நடித்தாலும், கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படங்கள் பகத் ஃபாசிலுக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. புஷ்பா படத்தின் மூலம் தெலுங்கிலும் மாஸ் காட்டிய பகத் ஃபாசில் படங்கள் தற்போது எங்கே வெளியானாலும் ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
ஆவேசம் வசூல் வேட்டை: ஜித்து மோகன் இயக்கத்தில் பகத் ஃபாசில் நடித்து வெளியான மலையாள திரைப்படம் வெறும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், 65 கோடி ரூபாய் வசூலை 2 வாரத்திற்குள் ஈட்டி மாஸ் காட்டி வருகிறது. இந்த படமும் 100 கோடி கிளப்பில் பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் ஆடு ஜீவிதம் வரிசையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவேசமான கோவை மக்கள்: கோவை ரேஸ்கோர்ஸ் அருகே உள்ளது கே.ஜி திரையரங்கம். கோவையில் பிரபலமான இந்த திரையரங்கில் ஆவேசம் என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது. நேற்று மாலை திரையரங்கில் படம் போட்ட பின்பு ஏ.சி வேலை செய்யாமல் இருந்ததாக ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் திரையரங்கு நிர்வாகத்தில் புகார் அளித்தனர்.
ரசிகர்கள் அதிருப்தி: ஆனால் நிறுவனத்தினரிடம் இருந்து முறையாக பதில் வராததால் டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தருமாறு கூறி, அங்கு வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கோவையில் புகழ்பெற்ற திரையரங்கில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வெயில் காலம் என்பதால் ஏசி தியேட்டரில் சென்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சில தியேட்டர்கள் இப்படி ஏசி போடாமல் ஏமாற்றினால் அடிக்கிற வெயிலுக்கு கோபம் வரத்தானே செய்யும்.


Click it and Unblock the Notifications











