கார் விபத்தில் உயிரிழப்பு விவகாரம்...சிம்புவை கைது செய்ய கோருவது சரியா?
நடிகர், இயக்குநர் டி.ராஜேந்தர் பயணித்த கார் மோதி சாலையைக் கடந்த ஒருவர் காயமடைந்து சிகிச்சை பலனின்றி பலியானார். இது சம்பந்தமாக வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் சிம்புவை கைது செய்யும் கோரிக்கை வைக்கப்படுகிறது. சட்டப்படி இது சரியா உண்மை என்ன என்று பார்ப்போம்.

டி.ராஜேந்தர் சென்ற கார் மோதி ஒருவர் பலி
நேற்று ஊடகங்களில் ஒரு செய்தி வேகமாக பரவியது. நடிகர் டி.ராஜேந்தர் சென்ற கார் மோதி காலில் காயம் இருந்ததால் சாலையை தவழ்ந்துக் கடந்த ஒருவர் கார் மோதியதில் காயமடைந்த நிலையில் டி.ராஜேந்தர் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சி எடுத்த நிலையில் சிகிச்சைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். காரை ஓட்டிய ஓட்டுநர் செல்வம் காவல் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

சிம்புவை கைது செய்ய கோரிக்கை
ஆனால் இன்று காலையில் வாகன உரிமையாளர் சிம்புவைக் கைது செய்ய வேண்டும் என்றும், சிம்பு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியது போலவும், போலீஸார் அவர் செலிபிரிட்டி என்பதால் ஓட்டுநரை மட்டும் கைது செய்துள்ளார்கள் வாகன உரிமையாளர் சிம்புவையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. இது சரியான வாதமா? போலீஸார் சட்டத்திற்கு புறம்பாக நடந்தார்களா? விபரத்தை பார்ப்போம்.

விபத்து கைது நடவடிக்கை எப்படி இருக்கும்
டி.ராஜேந்தர் கார் மோதி ஒருவர் உயிரிழந்தது விபத்து. ஓட்டுநரின் அஜாக்கிரதையால் ஒரு உயிர் பலியானது. உயிரிழப்பை நியாயப்படுத்த முடியாது, ஆனால் மோட்டார் வாகன சட்டப்படி ஒரு விபத்து நடந்து ஒருவர் காயமடைந்தால் ஐபிசி 304 பிரிவின் கீழ் வழக்கு தொடரப்படும், வாகன ஓட்டுநர் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் கட்டியப்பின் விடுவிக்கப்படும். ஓட்டுநர் கைது செய்யப்பட மாட்டார்.

நடந்தது என்ன?
டி.ராஜேந்தர் விவகாரத்தில் சிசிடிவி காட்சிப்பதிவின்படி அவரது வாகனம் ஒரு சாலை வளைவில் திரும்புகிறது. அங்கு சாலையில் காலில் காயம்பட்ட நிலையில் அப்பகுதியில் வசிக்கும் முதியவர் சாலையில் தவழ்ந்தபடி செல்கிறார். அவர் மீது டி.ராஜேந்தர் கார் மோதி, ஏறி இறங்குகிறது. இது முற்றிலும் ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நடந்த விபத்து. அதன் பின்னர் காயமடைந்தவரை காரில் பயணம் செய்த டி.ராஜேந்தர் இன்னொரு காரில் ஏற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு போலீஸுக்கும் தகவல் அளித்துள்ளார்.

விபத்து பலி, வழக்குப்பதிவு...ஓட்டுநர் கைது
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் முன் பெரியவர் உயிரிழந்துவிட்டதால் ஓட்டுநரை போலீஸார் கைது செய்கின்றனர். மறுநாள் ஓட்டுநர் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார். சட்டப்பிரிவும் அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருத்தல் (ஐபிசி 304-எ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்து ஏற்பட்டால் இதுதான் சட்ட நடைமுறை. இதற்குப்பின் வழக்கு நடக்கும் காரின் இன்ஷுரன்ஸ் நிறுவனமும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நடக்கும் வழக்கில் அவருக்கு தேவையான இழப்பீடும், ஓட்டுநருக்கான தண்டனையும் விதிக்கப்படும் அவ்வளவே.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்
இதில் நேற்று மாலை சில ஊடகங்களில் சிம்புவின் கார் மோதி தனியார் நிறுவன காவலாளி பலி என பதிவு வருகிறது. சிம்பு பெயரில் கார் இருப்பதால் பரபரப்புக்கு பதிவிடுவதும் அதையொட்டி இன்று காலை சிம்புவை கைதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் சிலரால் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓய்வுப்பெற்ற போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, "சட்டப்படி ஒரு விபத்து என்றால் வாகனத்தை இயக்கியவரே நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார். வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை வராது.

வாகன உரிமையாளர் கைது செய்யப்பட சட்டத்தில் இடமுண்டா?
வாகன உரிமையாளர் மீது எங்கு நடவடிக்கை வரும் என்றால் வாகன உரிமையாளர் வாகனத்தை 18 வயதுக்கு குறைவானவருக்கு இயக்க கொடுத்து அதன் மூலம் உயிரிழப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனத்தை இயக்கிய 18 வயதுக்குட்பட்டவர் மைனர் என்பதால் காரின் உரிமையாளர் மீது வழக்கு பாயும். இது சமீபத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டத்தில் உள்ள பிரிவு ஆகும். அதன்படி பார்த்தாலும் சிம்பு பெயரில் உள்ள வாகனம் என்று வைத்துக்கொண்டாலும் ஓட்டியவர் 30 வயதுக்கு மேல் உள்ள ஓட்டுநர் என்பதால் எந்தவிதத்திலும் உரிமையாளர் மீது நடவடிக்கை கோர முடியாது.

போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை சட்டப்படி சரியா?
இதுபற்றி அறியாமல் சிம்புவைக் கைது செய்யவேண்டும் என்று கேட்பது அடிப்படையற்ற ஒன்று. இதில் அனைத்தும் சட்டப்படியே நடந்துள்ளது. முறைப்படி விபத்து உயிரிழப்பு ஏற்பட்டால் போடப்படும் வழக்கு போடப்பட்டுள்ளது. கார் ஓட்டுநரே காரை ஓட்டியுள்ளார், அவர் மீது வழக்குப்போடப்பட்டுள்ளது.

கார் ஓட்டத்தெரியாத டி.ஆர்
டி.ஆருக்கு கார் ஓட்டத்தெரியாது என்பதாலேயே ஆக்டிங் டிரைவரை அழைத்துள்ளார். ஆகவே டி.ஆர் இதில் எங்குமே பொறுப்பாக மாட்டார். காரில் பயணித்தவரே பொறுப்பாகாதபோது சிம்பு பெயரில் வாகனம் இருப்பதால் அவரை கைது செய்யவேண்டும் என்று கோருவது குழந்தைத்தனமானது, சட்டம் அறியாதவர்கள் பேசுவது ஆகும்". என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











