மாயாவி பட நடிகையின் தந்தை கொலை.. உடல் முழுக்க டேப்பால் சுற்றப்பட்டு கொடூரம்.. கொடைக்கானலில் பரபரப்பு
திண்டுக்கல்: மாயாவி படத்தில் 'கடவுள் தந்த அழகிய வீடு' என்ற பாடலில் நடித்து புகழ் பெற்றவர் விஷ்ணு பிரியா. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால் கொலை செய்யப்பட்டார். அதனை செய்தவர் அவரது தந்தை சூரிய நாராயணன். இந்நிலையில் சூரிய நாராயணனும் கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகராக இப்போது கலக்கிவரும் சிங்கம்புலி இயக்குநராக அறிமுகமான படம் மாயாவி. சூர்யா, ஜோதிகா, சத்யன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் தோல்வியடைந்தாலும் பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. முக்கியமாக அதில் வரும் 'கடவுள் தந்த அழகிய வீடு' என்ற பாடல் வெகு பிரபலம். அதில் நடித்தவர் மாற்று திறனாளி நடிகை விஷ்ணு பிரியா. அவரும் அந்தப் பாடல் மூலம் தமிழ்நாடெங்கும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த விஷ்ணு பிரியா?: இவர் சென்னையை சேர்ந்தவர் ஆவார். மாயாவி படத்தில் நடித்ததை அடுத்து வெகு பிரபலமானார். மேலும் ரமேஷ் என்பவரை திருமணமும் செய்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில் ரமேஷுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் சில வருடங்களுக்கு முன்பு கொடைக்கானலில் சிகிச்சை எடுத்துவந்தார். அதற்காக விஷ்ணு பிரியாவும் அவரது தந்தை சூரிய நாராயணனும் அங்கேயே தங்கும் சூழ்நிலை உருவானது.

கொலை செய்யப்பட்ட நடிகை: அப்போது டிரைவர் பிரபாகரன் என்பவருடன் விஷ்ணு பிரியாவுக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. அந்த உறவிலிருந்து வெளியே வரும்படி தந்தை சூரிய நாராயணன் எவ்வளவோ சொல்லி பார்த்தார். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. இதனால் ஆத்திரமடைந்த தந்தை கூலி படையை ஏவி பிரபாகரனை படுகொலை செய்தார். அதனையடுத்து கைது செய்யப்பட்டு விடுதலையும் ஆனார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
தந்தை கொலை: இந்நிலையில் சூரிய நாராயணன் கொடைக்கானலில் பங்களா ஒன்றை வைத்திருக்கிறார். அதில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு அறைகளும் வாடைக்கு விடப்படுகின்றன. அதில் சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் போல் ஐந்து பேர் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் பாதுகாவலர்களை துணியால் கட்டிப்போட்டுவிட்டு; சூரிய நாராயணனை சேரில் அமர வைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் டேப்பால் சுற்றி கொலை செய்திருக்கிறார்கள். மேலும் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் நகைகளையும் திருடி சென்றிருக்கிறார்கள்.
கொலைக்கு என்ன காரணம்?: தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறை மாவட்ட கண்காணிப்பாளர் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு பிரபாகரனை கொலை செய்ததற்காக பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்துவருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications