Leo - லியோ டான்ஸர்களுக்கு சம்பள பிரச்னை.. அதெல்லாம் தவறான ஒன்று.. பிரச்னைக்கு வந்தது முற்றுப்புள்ளி
சென்னை: Leo Dancers (லியோ டான்ஸர்ஸ்) லியோ படத்தின் நா ரெடிதான் பாடலுக்கு நடனம் ஆடிய கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்ற பிரச்னை குறித்து ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கமளித்திருக்கிறார்.
கோலிவுட்டில் இப்போதைக்கும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் என்றால் அது லியோ. விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் அந்தப் படத்தைல் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார். சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்று நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கிறது.

ரிலீஸ்: படம் அக்டோபர் 19ஆம் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸாகிறது. கடந்த ஐந்தாம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இன்று மாலை படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகவிருக்கிறது. பட ரிலீஸுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடித்துள்ளன. இந்த சூழலில் படத்துக்கு புதிய பிரச்னை ஒன்று எழுந்தது.
சம்பள பாக்கி?: அதாவது நா ரெடிதான் பாடலில் மொத்தம் 1400 நடன கலைஞர்கள் நடனம் ஆடியிருந்தனர். அந்தப் பாடல் பெரும் ஹிட்டடித்தது ஆனால் அதில் நடனமாடிய சிலர் தங்களுக்கான சம்பளம் இன்னும் வரவில்லை என்று கூறினர். மேலும் காவல் துறையிலும் அதுதொடர்பாக புகாரும் அளித்தனர். ஏற்கனவே சில சிக்கல்களை சந்தித்துவரும் லியோவுக்கு இந்த சிக்கல் புதிய தலைவலியாக அமைந்தது.
விளக்கம்: இந்நிலையில் இதுகுறித்து ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கமளித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "லியோ திரைப்படத்தின் நடன காட்சியில் ஆடியவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று புகார் அளிக்கும் காணொலியை பார்த்தோம். படத்தின் ஒரு பாடலுக்கு 2,000 நடன கலைஞர்களை பயன்படுத்த இயக்குநர் விரும்புவதாக நடன அமைப்பாளர் தினேஷ் மாஸ்டர் தெரிவித்தார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக அதிகம்பட்சம் 600 பேர் மட்டுமே இருந்தனர். 1000 பேர் இருக்கும் சங்கத்தில் 400 பேர் ஏற்கனவே வெவ்வேறு படங்களுக்கு கமிட்டாகியிருக்கிறார்கள். எனவே அதிகமான நடன கலைஞர்கள் தேவைப்படும்போது முன் வரிசையில் நடன கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களையும், உறுப்பினராக இல்லாமல் ஓரளவு நடனம் தெரிந்தவர்கள் அழகான தோற்றம் உடைய ஆண்கள்/பெண்களை பின்வரிசையில் நிற்க வைத்து படமாக்குவது வழக்கம்.
இதுதான் முடிவு: அவர் ரிச் பாய்ஸ் என்றோ ரிச் கேர்ஸ் என்றோ மாடல்ஸ் என்றோ அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு வழக்கமாக மூன்று வேளை உணவளித்து கன்வெயன்ற் உட்பட 1000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். குறிப்பிட்ட பாடலில் 1,400 உறுப்பினர்கள் அல்லாதவர்கள் சென்னை பனையூரில் உள்ள ஆதி ஸ்ரீராம் ஸ்டூடியோவில் கடந்த ஜூன் மாதம் ஆறாம் தேதி முதல் 11ஆம் தேதி பாடல் காட்சி படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். இவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று விவாதித்து ஒரு நாளைக்கு 1,750 ரூபாய் என்ற வீதம் ஆறு நாட்களுக்கு 10,500 ரூபாய் என முடிவெடுக்கப்பட்டது.
பணம் செலுத்தியாச்சு: அதன்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக 94,60,500 ரூபாய் செலுத்தப்பட்டது. அதேபோல் இவர்களுக்கு ரிகர்சல் அளித்த ஒழுங்குப்படுத்தும் விதமாக சர்வீஸ் சார்ஜ் தொகை தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்க சங்கத்துக்கும் வழங்கப்பட்டது. தற்போது ஒரு சில எங்களுக்கு ஊதிய வழங்கவில்லை என்கிறார்கள். அது தவறான ஒன்று. சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சேர வேண்டிய தொகை அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. அதேபோல் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் 10,5000 ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











