முதல்வருக்கு நன்றி.. சின்னத்திரை தொழிலாளர்களுக்கு கோவிட்-19 காப்பீடு.. பெப்சி அறிக்கை!
சென்னை: பையனூரில் 1000 குடியிருப்புகள் அமைக்கும் திட்டத்துக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வருக்கு பெப்சி நன்றி தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலம், பையனூரில் 1000 குடியிருப்புகள் அமைக்கும் திட்டத்துக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் மற்றும் படப்பிடிப்பு அரங்கம் அமைப்பதற்காக, தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு, பையனூரில் 96 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இந்நிலையில், தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் இதற்கான அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மூன்று நான்கு மாதங்களாக தள்ளி வைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் மகிழ்ச்சி கலந்த நன்றி. மேலும் அம்மா படப்பிடிப்பு நிலையம் கட்ட இரண்டாம் தவணை நிதியாக ரூபாய் 50 லட்சம் காசோலையாக தமிழக முதல்வர் வழங்கினார்.

தினக்கூலி பிரிவில் இருக்கின்ற பொருளாதாரத்தில் நலிந்த ஏறக்குறைய 5000 தொழிலாளர்களுக்கு முன்பணம் கட்டுவதோ, மாதத் தவணை கட்டுவதோ இயலாத காரியம் என்று 26.8.2018 அன்று முதல்வரிடம் தெரிவித்தபோது, துணை முதல்வரிடம் பேசி தொழிலாளர்களுக்கு உதவும்படி ஆலோசனை வழங்கினார்.
துணை முதல்வரும் செய்தி ஒளிப்பரப்புத்துறை அமைச்சரும் அதிகாரிகளுடன் விவாதித்து குறைந்த வருவாய் உள்ள தொழிலாளர்களுக்கு 2000 வீடுகள் இலவசமாக கட்டித் தர வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்தனர். எங்கள் வேண்டுகோளை ஏற்ற முதல்வருக்கு நன்றி.
தற்போது சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் அனைத்து படப்பிடிப்புகளும் தயாரிப்பாளர்கள் சங்கம் (Steps) பரிந்துரைக் கடிதம் வழங்கிய பின் அந்தத் தயாரிப்பாளர்களுக்கு சம்மேளனம் தொழில் ஒத்துழைப்பு வழங்குவது என ஒப்புக் கொள்ளப்பட்டது.

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் கோரிக்கையாக தற்போது கொரோனாவால், தொழிலாளர்கள் மத்தியில் பயம் உள்ளதால் கோவிட்-19 காப்பீடு பெற்றுத் தரும்படி வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிலாளர்களின் வேண்டுகோளையும் ஏற்ற சேனல்கள் கோவிட்-19 காப்பீடு செய்து தருவதாக தெரிவித்த தொலைக்காட்சி நிறுவனங்கள், ஒப்புக் கொண்டுள்ள எங்கள் கோரிக்கையை ஏற்ற தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எங்கள் அன்பு கலந்த நன்றி. இவ்வாறு பெப்சி அமைப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











