ஏழாயிரம் பாடல்கள்... கவிஞர் வைரமுத்துவின் சாதனைக்குப் பாராட்டு விழா!
சென்னை: தமிழ் சினிமாவில் 7000 பாடல்கள் எழுதிய கவிஞர் வைரமுத்துவுக்கு வரும் அக்டோபர் 14-ம் தேதி பிரமாண்ட பாராட்டு விழா நடக்கிறது.
தமிழில் கவியரசு கண்ணதான், கவிஞர் வாலிக்கு நிகரான கவிஞராகப் புகழ் பெற்றவர் வைரமுத்து.
தமிழ் சினிமா பாடல்களோடு நிற்காமல், நாவல்கள், கட்டுரைப் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

நிழல்கள்...
கவிஞர் வைரமுத்து 1980-ம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் படத்துக்காக, பொன்மாலைப்பொழுது... என்ற பாடலை முதன்முதலாக எழுதினார். இதுவரை அவர், 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்.

6 தேசிய விருதுகள்
இதுவரை அவர் 6 தேசிய விருதுகளையும், 6 தமிழக அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். அவர் எழுதி விரைவில் திரைக்கு வர இருக்கும் படங்களில் ஒன்று, கங்காரு. சாமி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு பின்னணி பாடகர் சீனிவாஸ் இசையமைத்துள்ளார். அவர் இசையமைத்துள்ள முதல் படம் இது.

பாராட்டு விழா
இந்த படத்தில் இடம்பெறும் 6 பாடல்களையும் கவிஞர் வைரமுத்துவே எழுதியிருக்கிறார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை, வைரமுத்துவுக்கு பாராட்டு விழாவாக நடத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்பாடு செய்துள்ளார். இந்த விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடக்கிறது. விழாவில், தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்-பாடகிகள் கலந்து கொள்கிறார்கள்.

ட்ரைலர்
கவிஞர் வைரமுத்துவை பற்றிய ஒரு டிரைலர் மற்றும் அவர் எழுதி மிக பிரபலமான 10 பாடல் காட்சிகள், விழாவில் திரையிடப்படுகிறது. கங்காரு படத்தில் இடம்பெறும் பாடல்களை சீனிவாஸ் குழுவினர் பாடுகிறார்கள்.

மணிவண்ணனுக்கு விழா எடுத்தவர்...
கங்காரு படத்துக்கு முன் அமைதிப்படை 2 படத்தை எடுத்த சுரேஷ் காமாட்சி, அப்படத்தின் இயக்குநர் மணிவண்ணன் இயக்கிய 50வது படம் என்பதால், இதே போல விழா எடுத்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications