கொரோனாவால் முடங்கியது சினிமா தொழில்.. மளிகை கடை திறந்த திரைப்பட இயக்குனர்.. மக்களுக்கு உதவ திட்டம்!
சென்னை: சினிமா தொழில் முடங்கியுள்ளதால் திரைப்பட இயக்குனர் ஒருவர், சென்னையில் மளிகை கடை ஒன்றைத் திறந்துள்ளார்
Recommended Video
கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸுக்கு பலியாகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நான்காவது இடம்
உலக அளவில் கொரோனா அதிகமாகப் பாதித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, நான்காவது இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக சில நாடுகள் லாக்டவுனை பிறப்பித்தன. இதனால் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் நிலைமை மோசமாக உள்ளது. பலர் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரச் சிக்கல்
சினிமா தொழிலாளர்களும் கடும் பொருளாதாரச் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். வேலை இல்லாததால், அவர்களின் வாழ்வாதரமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனால் மாற்று வேலைகள் பற்றி அவர்கள் யோசித்து வருகின்றனர். இந்நிலையில், சினிமா தொழில் முடங்கியுள்ளதால் திரைப்பட இயக்குனர் ஒருவர், மக்களுக்கு உதவும் வகையில் மளிகை கடை ஒன்றை தொடங்கியுள்ளார்.

துன்பத்தைக் கண்டு
ஒரு மழை நான்கு சாரல்கள், மௌன மழை, பாரதபுரம், நானும் பேய் தான், துணிந்து செய் ஆகிய படங்களை இயக்கி இருப்பவர் பி.ஆனந்த். இவர் சென்னை முகலிவாக்கத்தில் மளிகை கடை திறந்திருக்கிறார். மக்கள் படும் துன்பத்தைக் கண்டு அவர்களுக்கு உதவுவதற்காக இந்த மளிகை கடையை தொடங்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி ஆனந்த் கூறியதாவது:

பாபு ஸ்டோர்
சினிமாவில் பத்து வருடத்துக்கும் மேலாக இருக்கிறேன். ஐந்து படங்களை இயக்கி உள்ளேன். கொரோனாவால் சினிமா தொழில் முடங்கியுள்லது. இந்த காலகட்டத்தில் மக்களுக்கு உதவ, பாபு ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடையை தொடங்கி இருக்கிறேன். இதில் எனக்கு முன் அனுபவம் இல்லை. வணிகம் செய்யத் தொடங்கிய இந்த குறுகிய காலக்கட்டத்தில், இந்த கடையின் அவசியத்தை உணர்ந்தேன்.

அதிகளவில் தொடர்பு
மக்கள் மருத்துவர்களுக்கு அடுத்ததாக, வியாபாரிகளுடன் தான் அதிகளவில் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன். இவர்களுக்கு தரமான பொருட்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்று நோக்கத்தில், இந்த கடையைத் தொடங்கினேன். அதன்படி குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறேன். மக்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள்.

விழிப்புணர்வு வேண்டும்
பொருட்களின் விலை பட்டியலையும் பொதுமக்களின் பார்வைக்காக வைத்திருக்கிறேன். சிலர் தரமற்ற பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அத்துடன் மூன்றாம் தர பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும். மக்கள் இதுகுறித்த விழிப்புணர்வை பெறவேண்டும். தற்போது நான் துணிந்து செய் என்ற படத்தை இயக்கி வருகிறேன். 'நானும் ஒரு பேய்தான் என்ற படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இவ்வாறு கூறினார்.


Click it and Unblock the Notifications











