ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் மோசடி செய்த சினிமா இயக்குநர் கைது!
விளம்பரம் நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக சினிமா இயக்குநர் ஜீவா கைது செய்யப்பட்டார். பிறகு என்ற படத்தை இயக்கியவர் இவர்.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த இவருடைய உண்மையான பெயர் மரிய சார்லஸ். இவரது தம்பி ஜான்சன் (43) திருவொற்றியூரில் வசித்து வருகிறார்.
இருவரும் சேர்ந்து வணக்கம் சென்னை என்ற பெயரில் விளம்பர நிறுவனம் நடத்தினர். இதில் பணிபுரிவதற்கு விளம்பர மேலாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். வேலைக்கு ஆட்களை எடுக்கும்போது, ரூ. 20 ஆயிரம் வரை உங்களுக்கு சம்பளம் தருவேன் என்று ஜீவாவும், ஜான்சனும் உறுதி அளித்தனர்.
இதை நம்பி 65 பேர் இவர்களது நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். ஆனால் 2 மாதங்களாகியும் யாருக்கும் சம்பளம் தரப்படவில்லை. இதனால் ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசில் மணிகண்டன் என்பவர் புகார் செய்தார். துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் ரவீந்திரன் ஆகியோரது மேற்பார்வையில் தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஸ்வேஸ்வரய்யா விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பட்டதாரி வாலிபர்கள் அனைவரும் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மோசடியில் ஈடுபட்ட இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து மரிய சார்லஸ், ஜான்சன் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரை இருவரும் விளம்பரத்துக்காக வசூல் செய்திருப்பது தெரிய வந்தது. கைதான 2 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications











