பிரபல திரைப்பட தொகுப்பாளர் ஜி.ஜெயச்சந்திரன் மாரடைப்பால் திடீர் மரணம்.. நடிகர் விஜயகாந்த் இரங்கல்!
சென்னை: பிரபல எடிட்டர் ஜி.ஜெயச்சந்திரன் மாரடைப்பால் இன்று காலமானார். அவர் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரைப்பட கல்லூரி மாணவர்கள் உருவாக்கி 1986 ஆம் ஆண்டு வெளியான 'ஊமை விழிகள்' படம் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் ஜெயச்சந்திரன்.
இவர் தந்தை கோவிந்தசாமியும் பிரபல எடிட்டர். தமிழ் சினிமாவில் சினிமாஸ்கோப் தொழில் நுட்பத்தில் வெளியாகி வெற்றி பெற்ற முதல் படம் 'ஊமை விழிகள்.

அதைத் தொடர்ந்து அவர் பணியாற்றிய பல படங்கள் சினிமாஸ் கோப்பில் தயாரானது.
சினிமா வட்டாரத்தில் இவரை ஸ்கோப் எடிட்டர் என்று புகழ்ந்தனர். 'ஊமை விழிகள்' படத்தைத் தொடர்ந்து, உழவன் மகன், உரிமை கீதம், பூந்தோட்டக் காவல்காரன், புதுப் பாடகன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் உட்பட சுமார் 150 படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார்.
நடிகர் விஜயகாந்தின் ஆஸ்தான எடிட்டர் இவர். இவருக்குத் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 58.

விஜயகாந்த் இரங்கல்
அவர் மறைவை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
படத் தொகுப்பாளரும் தயாரிப்பாளரும் மற்றும் எனது மிகச் சிறந்த நண்பருமான ஜி.ஜெயச்சந்திரன் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மனவருத்தம் அடைந்தேன். ஊமை விழிகள், உழவன் மகன், பூந்தோட்ட காவல்காரன், புதுப்பாடகன், புலன் விசாரணை, பரதன், சக்கரைத்தேவன் உள்ளிட்ட பல படங்களில் அவருடன் பணியாற்றியது என்றும் நினைவில் நிற்கும்.
அவருடன் பணியாற்றிய நாட்கள் ஒரு பொற்காலம் என்றால் அது மிகையாகாது. மிகச்சிறந்த திறமைசாலியும் சிறந்த படத் தொகுப்பாளருமான ஜெயச்சந்திரன் மறைவு திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











