ஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி படங்களில் பணியாற்றியவர்.. பிரபல எடிட்டர் புற்றுநோய்க்கு பலி!
ஐதராபாத்: புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல எடிட்டர் திடீரென மரணமடைந்திருப்பது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர். தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் எடிட்டராக பணியாற்றி வந்தார்.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த கோலா பாஸ்கர், தமிழில் பல படங்களில் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

போக்கிரி, வில்லு
செல்வராகவன் இயக்கிய ஆறு படங்களுக்கு இவர் எடிட்டராக பணியாற்றியுள்ளார். புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் படங்களுக்கு எடிட் செய்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி, வில்லு, தனுஷ் நடித்த 3 உள்ளிட்ட பல்வேறு படங்களில் எடிட்டராகப் பணியாற்றியவர் இவர்.

கோலா பாஸ்கர் மகன்
செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி இயக்கிய, மாலை நேரத்து மயக்கம் படத்தை இவர்தான் தயாரித்தார். இதில் கோலா பாஸ்கர் மகன் பாலகிருஷ்ணா நாயகனாக நடித்தார். கோலா பாஸ்கருக்குத் தொண்டைப் புற்றுநோய் இருந்தது. அதனால் அவதிப்பட்டு வந்த அவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி
இதற்காகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது, 55. இது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மறைவுக்குத் தமிழ், தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில்
மறைந்த கோலா பாஸ்கருக்கு மனைவியும் பாலகிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர்.
இந்த கொரோனா பரவல் காலத்தில், திரையுலகில் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











