டி.எம்.எஸ் என்கிற மகான் என்னை வாழ வைத்தவர்: இசையமைப்பாளர் தேவா
சென்னை: மறைந்த பழம் பெரும் பாடகர் டி.எம்.எஸ் சௌந்தரராஜன் உடலுக்கு திரையுலகப் பிரபலங்களும் அவரது ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டி.எம்.எஸ் அவர்கள் தனது வாழ்க்கைக்கு ஒளி ஏற்றி வைத்த மகான் என்று இசையமைப்பாளர் தேவா புகழ்ந்துரைத்தார்.
மதுரையில் பிறந்து மந்தைவெளியில் தான் வாழ்ந்த இல்லத்திலேயே நேற்று மாலை மரணித்த டி.எம்.எஸ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல் அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அனைத்து பிரபலங்களுமே அவரது குரலுக்கு ரசிகர்களானவர்கள்.

மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின்
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேற்றிரவு அஞ்சலி செலுத்தினர். அப்போது பேசிய ஸ்டாலின், கல்லையும் கரையச் செய்யும் வகையில் பாடி எங்களை மகிழ்வித்தவர் டி.எம்.எஸ் என்று புகழஞ்சலி செலுத்தினார்.

இசையமைப்பாளர்கள்
டி.எம்.எஸ் சௌந்திரராஜன் பிரபல இசையமைப்பாளர்கள் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அவரது உடலுக்கு எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், தேவா, இளையராஜா ஆகிய இசையமைப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

வாழவைத்த மகான்
டி.எம்.எஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்த தேவா, செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னை வாழ வைத்த மகான் டி.எம்.எஸ் என்று கண்ணீர் மல்க கூறினார். சினிமா பாடல்கள் மட்டுமல்லாது பக்திப் பாடல்களின் ஆல்பங்களுக்கும் பாடிக்கொடுத்துள்ளார் என்றார். அவரது குரலுக்கு ஈடு இணையில்லை என்றும் கூறினார்.

நடிகர்கள் அஞ்சலி
நடிகர் சிவகுமார், நடிகை சச்சு ஆகியோர் காலை நேரத்தில் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். டி.எம்.எஸ் அவர்களின் வெண்கலக்குரலுக்கு நான் ரசிகை என்றார் நடிகை சச்சு.

ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
டி.எம்.எஸ் உடலுக்கு அவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்த வந்த வண்ணம் உள்ளனர். அவர் பாடிய பாடல்களைப் பாடியும், அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டி.எம்.எஸ் மறைந்தாலும் அவரது குரலால் என்றைக்கும் மறையாமல் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











