முரளி பையனுக்கு பெண் கொடுக்க பயந்தேன்.. ஆனால், சேவியர் பிரிட்டோ என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் நேசிப்பாயா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இப்படத்தில் முரளியின் மகன் ஆகாஷ் முரளி ஹீரோவாகவும் நடிகை அதிதி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளர். இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, முரளியின் பையனுக்கு முதலில் என் மகளை திருமணம் செய்துவைக்க பயந்தேன் என்றார்.
மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி நேசிப்பாயா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். விஷ்ணுவர்தன் இயக்கும் இப்படத்தில், அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காதல் கதையாக உருவாக உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.

பெண் கொடுக்க பயந்தேன்: இதைத் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, முரளியின் பையனுக்கு என் மகளை கொடுப்பதற்கு மிகவும் பயமாக இருந்தது. முதல் நாள் அவங்க வீட்டுக்கு போகும் போது ஒருவிதமான பயத்தோடுதான் போனேன். ஆனால், வீட்டிற்குள் சென்ற போது அவர்கள் நடந்து கொண்ட விதம், பாசத்தை பார்த்து வியந்து என் மனைவியிடம் இவர்கள் நிச்சயம் மகள் சினேகாவை நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்று என் மனைவியிடம் சொன்னேன். ஏன் என்றால், வீட்டில் அனைவரும் அன்பானவர்களாக இருக்கிறார்கள்.
மகள் விரும்பினாள்: என் மகள் விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பதற்காக சிங்கப்பூர் போனாங்க, ஆனால், அவங்க போனதே ஆகாஷ் முரளியை காதலிப்பதற்குத்தான் என்று பின் தான் தெரிந்தது. அதுவும் அனைவருக்கும் தெரிந்த பிறகு கடைசியாகத்தான் எனக்கு விஷயம் தெரிந்தது. ஆகாஷை காதலிக்கிறேன் என்று சொன்னதும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் என்றால் நான் அவளுக்காக இரண்டு வரன்களை பார்த்துவைத்து இருந்தேன். இருந்தாலும் மகள் விரும்பியதால் நான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தேன்.
சேவியர் பிரிட்டோ பேச்சு: ஆகாஷ் முரளிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது கனவு இதனால், அவருடைய முதல் படமே பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று என் மகள் ஆசைப்பட்டாள். முதலில் சின்ன சின்ன படம் பண்ணட்டும் என்றேன் ஆனால், அவள் முடியவே முடியாது என்று பிடிவாதமாக இருந்து மும்பைக்கு சென்று விஷ்ணுவர்தனை சந்தித்து எப்படியோ இந்த படத்தை இயக்க சம்மதிக்க வைத்து, என்னிடம் இருந்து அட்வான்சையும் வாங்கி கொடுத்துவிட்டார். என் மகளுக்கு ஆகாஷின் முதல் படம் நல்லபடமாக இருக்க வேண்டும், அந்த படத்தை விஷ்ணு வர்தன் தான் இயக்க வேண்டும் என்பதில் என் மகள் பிடிவாதமாக இருந்தாள் என்று தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அந்த நிகழ்ச்சியில் பேசினார்.
காதலர்கள் பார்க்கவேண்டிய படம்: முன்னதாக இப்படம் பற்றி விஷ்ணுவர்தன், ஆகாஷ் முரளி திறமையான நடிகர். தனது நடிப்புத் திறனை சிறப்பாக மெருகேற்றியுள்ளார். இந்தப் படம் சாகச காதல் கதையாக இருக்கும். காதலில் உள்ளவர்கள், காதலித்தவர்கள், காதலிக்கப் போகிறவர்கள் அனைவரையும் ஈர்க்கும் விதமாக இந்தப் படம் இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











