இதுதான் முதன்முறையாம்.. மனித உரிமைகள் ஆணையம் பற்றி இப்படியொரு படம்.. அசத்தும் இயக்குனர்!
சென்னை: முதன்முறையாக மனித உரிமைகள் ஆணையத்தைப் பற்றி முழுநீளத் திரைப்படம் உருவாகிறது.
இந்திய சினிமாக்களில் மனித உரிமைகள் ஆணையத்தின் மாண்பு மற்றும் அதன் செயல்பாடுகளையும் பாராட்டி வசனங்களும், காட்சிகளும் வந்து செல்வதுண்டு.
ஆனால், முதன்முறையாக அதன் செயல்பாடுகளை மையமாக வைத்து தமிழ்த் திரைப்படம் உருவாகிறது.

மனித உரிமை மீறல்
திரைப்படக்கல்லூரி மாணவரான ராஜா ஶ்ரீபத்மநாபன் கதை, திரைக்கதை வசனத்தை எழுதி இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் மதுரை சுற்று வட்டாரத்தில் நடக்க இருக்கிறது. நாட்டில் கொடூரமான மனித உரிமை மீறல் குற்றங்கள் நடந்து நெஞ்சை பதறவைக்கும் போதெல்லாம் நீதிமன்றமும், மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து (SUOMATO) வழக்கை விசாரிப்பது நடக்கிறது.

மக்கள் நம்பிக்கை
குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறும்போது இப்படி தாமாக முன்வந்து விசாரிக்கும் போக்கை அதிகமாகக் காணமுடிகிறது. இது ஒரு வகையில் நீதித்துறை, மனித உரிமைகள் அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாக அமைகிறது.

பின்புலமாகக் கொண்டு
ஒரு பெண்ணுக்கு நேரும் மனித உரிமை மீறல் மீதான விசாரணையைப் பின்புலமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. படத்தின், நாயகிக்கு நேரும் அவலத்தை தாமாக முன்வந்து விசாரிக்கும் மனித உரிமைகள் ஆணையம், நீதியை நிலைநாட்டி மக்கள் மத்தியிலும் பாதிக்கப்பட்ட பெண் முன்பும் மாண்புடன் உயர்ந்து நிற்பதைப் பற்றிய கதை இது.

அம்சரேகா நாயகி
இதில் நாயகனாக 'சாலையோரம்' படத்தில் நடித்த ராஜவர்மன் நாயகனாக நடிக்கிறார். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற மதுரையைச் சேர்ந்த அம்சரேகா நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஷர்மிளி, சென்ட்ராயன், வையாபுரி, வினோதினி, மீரா இன்னும் சில புது முகங்களும் நடிக்கின்றனர்.

பிடித்தமான படமாக
மனதை உலுக்கும் சம்பவங்களுடன் எல்லோருக்கும் பிடித்தமான படமாக இது இருக்கும் என்கிறார் இயக்குனர். ரஃகிட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு வேலுச்சாமி இளையராஜா ஒளிப்பதிவு செய்கிறார். வாரென் விஜே சார்லி இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் சந்துரு எழுதுகிறார்.


Click it and Unblock the Notifications











