கபாலிக்காக ஜூலை 15-ம் தேதி பெங்களூர்- சென்னை ஸ்பெஷல் ப்ளைட் விடும் ஏர்ஏசியா!
சென்னை: இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு விஷயம் ரஜினிகாந்தின் கபாலிக்காக நடக்கப் போகிறது.
கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க பெங்களூரிலிருந்து சென்னைக்கு, சிறப்பு விமானத்தை இயக்கவிருக்கிறது ஏர் ஏசியா நிறுவனம்.
கபாலி ஸ்பெஷல்
தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய விமான நிறுவனம் ஏர் ஏசியா. கபாலி படத்தின் ஸ்பான்சர்களுள் ஒன்றாக இணைந்துள்ள இந்த நிறுவனம், கபாலி படத்துக்காக இந்தியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யவிருக்கிறது.

பெங்களூர் - சென்னை
முதல் கட்டமாக பெங்களூரிலிருந்து சென்னைக்கு கபாலி ஸ்பெஷல் விமானத்தை இயக்குகிறது. இந்த விமானம் ஜூலை 15-ம் தேதி காலை 6.10-க்கு பெங்களூரிலிருந்து கிளம்பி 7.10-க்கு சென்னைக்கு வரும். மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பெங்களூரில் தரையிறங்கும்.

டிக்கெட் விலை
இந்த சிறப்பு விமானத்தில் பயணிக்க மொத்த கட்டணம் ரூ 7860 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் - சென்னை, சென்னை - பெங்களூர் என இருவழி பயணக் கட்டணம், கபாலி படத்துக்கான டிக்கெட், கபாலி ஆடியோ சிடி, சென்னையில் இறங்கியதிலிருந்து படம் பார்த்து முடித்து விமான நிலையம் திரும்புவதற்கான உள்ளூர் பயணக் கட்டணம், மதிய உணவு, நொறுக்குத் தீனி, குளிர் பானம் என அனைத்துக்கும் சேர்த்து இந்த கட்டணம் என அறிவித்துள்ளது ஏர் ஏசியா.

முதல் முறை
ஒரு திரைப்படத்துக்காக குறிப்பிட்ட இரு நகரங்களுக்கிடையில் இதுவரை விமான சேவை நடந்ததாக யாரும் கேள்விப்பட்டிருக்கவில்லை. ரஜினியின் கபாலிக்குதான் அந்தப் பெருமை கிடைத்துள்ளது. இதே போல மலேசியா - சென்னைக்கும் சிறப்பு விமானம் இயக்க ஏர் ஏசியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











