மணியின் மரணம் ஏற்படுத்திய பாதிப்பை மீடியா முன் மைக் போட்டுச் சொல்லமுடியாது- மோகன்லால்
திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்திருக்கிறார் மலையாள நடிகர் மோகன்லால்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடிகர் கலாபவன் மணி இறந்து போனது, ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் மணி அதிகம் நேசித்த நடிகர் மோகன்லால் மணியின் மரணம் குறித்து எதுவும் வெளிப்படையாக தெரிவிக்காதது, மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் மீடியா மற்றும் சோஷியல் மீடியாக்களில் மோகன்லாலை வறுத்து எடுத்தனர். இந்நிலையில் எல்லா சோகங்களையும் மீடியாவில் பகிர முடியாது என்று மோகன்லால் தெரிவித்திருக்கிறார்.
மோகன்லால்
நடிகர் மணியின் இறப்பு குறித்து மோகன்லால் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் "முதலில் நான் மணியின் மரணம் குறித்து எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் தொடர்ந்து வெளியான செய்திகளால் நான் இதைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மணியை மருத்துவமனையில் அனுமதித்த செய்தி தெரிந்தது முதல், அந்த மருத்துவமனையுடன் நான் தொடர்பிலேயே இருந்தேன். ஆனால் அவரது உடல்நிலை குறித்து வந்த செய்திகள் அவ்வளவு உகந்ததாக இல்லை.
வெற்றிடம்
மணியின் மரணம் எனக்குள் ஒரு வெற்றிடத்தை உண்டாக்கி விட்டது. இதுகுறித்து நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. மலையாள இயக்குநர் பத்மராஜன் மற்றும் ஆலுமூதன் ஆகியோரின் மரணங்களை அருகில் இருந்து பார்த்தவன் நான். அதேபோன்ற ஒரு உணர்வை நான் மீண்டும் அனுபவித்தேன்.
ஒளிவுமறைவின்றி
மணி எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு நண்பன். தனது உடல் சார்ந்த பிரச்சினைகள் அனைத்தையும் என்னிடம் ஒளிவுமறைவின்றி சொல்லி விடுவான். நான் அவனை சிகிச்சை எடுத்துக் கொள்ள சொல்லி வற்புறுத்தினேன், ஆனால் நிலைமை கைமீறிப் போய்விட்டது.
இந்த உலகத்தில்
நமக்கு மிக நெருக்கமானவர்கள் மரணத்தை தழுவும்போது அதனை நேரில் சென்று பார்க்கும் மனோதிடம் எனக்கில்லை. அவர்கள் இந்த உலகில் எங்காவது வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.
மணியின் இறந்த
பிரீசரில் வைக்கப்பட்ட மணியின் இறந்த உடல் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வலைகளை, மீடியா முன்னால் மைக்பிடித்துக்கொண்டு ஒருசில வார்த்தைகளில் என்னால் பகிர்ந்து கொள்ள முடியாது. அங்கெ சென்றால் அவரது அம்மா மற்றும் மனைவியை என்ன சொல்லி என்னால் ஆறுதல் படுத்த முடியும்.
சில உறவுகளை
மணியைப் போன்று தங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நேர்மையாக பகிர்ந்து கொண்ட யாரையும் நான் பார்த்தது இல்லை. சில உறவுகளை எந்த அளவுகோல்களாலும் அளக்க முடியாது. இந்த 2 நாட்களாக மணியின் மரணம் தாங்கி வந்ததால் நான் தினசரிகளைக் கூட பார்க்கவில்லை. மணி இறந்து விட்டார் என்ற செய்தியை என்னால் தாங்க முடியவில்லை. கடந்த சில நாட்களாக இதனை மறப்பதற்கு நான் அதிகமான வேலைகளை செய்து வருகிறேன்" என்று மணி குறித்து தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் மோகன்லால்.


Click it and Unblock the Notifications











