முதல்ல நல்ல படங்களை கொடுங்க... திருட்டு விசிடியை அப்புறம் பாத்துக்கலாம்! - பாக்யராஜ்
இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முதலில் நல்ல படங்களை உருவாக்குவதில் அக்கறை செலுத்தட்டும். திருட்டு விசிடி பிரச்சினையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இயக்குநர் கே பாக்யராஜ் கூறினார்.
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'ரோஜா மாளிகை' படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்துகொண்டு பேசுகையில், "திருட்டு விசிடியால் சினிமாவுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது 10 சதவீதம்தான். ஆனால், நாம் நல்ல படம் எடுக்கவேண்டும் என்பதுதான் இங்கு முக்கியம்.

சமீபத்தில் வெளிவந்த 'மாநகரம்', 'எட்டு தோட்டாக்கள்' படங்கள் பெரிய நடிகர்கள் இல்லாவிட்டாலும் பேசப்படுகிறது என்றால் நல்ல கதைகள்தான் அதற்கு காரணம்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய அணி தேர்வாகியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பிடித்துப்போய் யாரும் தேர்வு செய்யவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைய பிரச்சினை இருக்கிறது. அதை நீங்களாவது சரிசெய்வீர்கள் என்பதற்காகத்தான் உங்களுக்கு ஓட்டு போட்டு தேர்வு செய்திருக்கிறார்கள்.
திரையரங்கு உரிமையாளர்கள் பெரிய படத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் சிறிய பட்ஜெட் படங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும். புதிய நடிகர்களின் படங்களுக்கு காலை காட்சி கொடுத்தால் அவர்களுக்கு பெரிய அளவில் பலன் இருக்காது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு காலைக் காட்சி கொடுத்தால்கூட அவர்களுக்காக ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள். ஆனால் புதிய நடிகர்களுக்கு அப்படியில்லை, அவர்களின் படங்களுக்கு மாலைக் காட்சிகள் கொடுத்தால்தான் பயனுள்ளதாக இருக்கும்," என்றார்.


Click it and Unblock the Notifications