கொஞ்சம் பிளாஷ்பேக்.. ஷூட்டிங் தொடங்கிய நிலையில்.. ஹீரோ விக்ரமுக்காக கதையை மாற்றி எடுக்கப்பட்ட படம்!
சென்னை: ஷூட்டிங் தொடங்கி நடந்து வந்த நிலையில், விக்ரமுக்காக திடீரென்று கதையை மாற்றி அந்த படத்தை எடுத்துள்ளனர்.
சினிமாவில், ஒரு கதையோடு தொடங்கப்பட்ட படம், பிறகு வேறு கதையோடு வெளியான சம்பவங்கள் நிறைய.
ஷூட்டிங் தொடங்கிய பிறகு பல படங்களின் கதைகள் மாற்றப்பட்டு இருக்கின்றன.

மாற்றப்பட்டப் படங்கள்
பொதுவாக கிளைமாக்ஸ் காட்சியை, இப்படி மாற்றி எடுப்பது வழக்கம். சிலர் இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகளை எடுத்து வைத்துக் கொள்வார்கள். பல படங்களுக்கு இரண்டு கிளைமாக்ஸ்கலை எடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த மாற்றங்கள் எல்லாம் சகஜம்தான்.

புரொடக்ஷன் மானேஜர்
பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம், சினேகா, நாசர், வடிவேலு, ஜனகராஜ் நடித்த படம், கிங். சமீபத்தில் மறைந்த, கிருஷ்ணகாந்த் தயாரித்திருந்தார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், முதன் முதலாகத் தயாரித்த படம் இது. தினா, இசை அமைத்திருந்தார்.

ஏ.எக்ஸ்.சாலமன்
கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது கவனிக்கப்பட்டது. விக்ரம், சினேகா நடிப்பும் பேசப்பட்டன. இந்தப் படத்தை ஏ.எக்ஸ். சாலமன் என்ற பெயரில் இயக்கி இருந்தார், பிரபு சாலமன். இதில் இடம் பெற்றுள்ள வடிவேலுவின் காமெடி இப்போதும் பேசப்பட்டு வருகிறது.

ஸ்பிளிட் பெர்சனாலிட்டி
முதலில், இந்தப் படத்தின் கதைக்குp பதில் வேறு கதையைதான் எடுக்க முடிவு செய்திருந்தனர். அந்தப் படத்துக்கு வைக்கப்பட்ட டைட்டில்தான், கிங். அது ஆக்ஷன் கதை. ஸ்பிளிட் பெர்சனாலிட்டியான ஹீரோ, தொடர்ந்து சில கொலைகளை செய்கிறார், ஏன் என்பது போல அந்த கதை செல்லும்.

அதன் ஷூட்டிங்
இதே போன்ற கதையை கொண்ட வேறொரு ஆக்ஷன் படத்திலும் விக்ரம் நடித்து வந்தார். அந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்தி ருந்தன. சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டிய நிலையில், சில காரணங்களால் நிறுத்தப்பட்டது அந்தப் படம். கிங் ஷூட்டிங் தொடங்கியதும் அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியது.

சரியாக இருக்காது
அப்போது, ஆக்ஷன் கதைகளில் அடுத்தடுத்து நடிப்பது சரியாக இருக்காது என ஹீரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், கிங் படத்தின் ஷூட்டிங் 20 நாட்கள் நடந்த நிலையில், கதையை மாற்ற முடிவு செய்தனர். அதனால், எடுத்திருந்த அந்த ஸ்பிளிட் பர்சனாலிட்டி ஆக்ஷன் கதையை, அப்படியே தூர வைத்தனர்.

தொகை பெரியது
ஷூட்டிங் செலவு ரூ.45 லட்சம் ரூபாய் வீண். அந்த தொகை பெரியது. இந்த செலவுக்காக, நான் கால்ஷீட் தருகிறேன் என்றாராம் விக்ரம். இதையடுத்து வேறு கதை முடிவு செய்யப்பட்டது. விக்ரம், சுவலட்சுமி நடிப்பில் பூஜை போட்டு நின்ற படம், விகடன். அதையும் பிரபுசாலமன் இயக்க இருந்தார். சுவலட்சுமியின் சொந்த படம் இது.

மாற்றாமல் இருந்தால்
அந்தப் படத்துக்கான கதையை அப்படியே எடுத்தனர். அந்தக் கதைதான் பிறகு கிங் என்ற பெயரில் வெளியானது. அந்தக் கதையை மாற்றாமல் இருந்திருந்தால், 'அந்நியனு'க்கு முன்பே, ஸ்பிளிட் பர்சனாலிட்டி பற்றி வந்த முதல் படமாக 'கிங்' இருந்திருக்கும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











