Flashback.. மூன்றாம் பிறை…. ஆட்ரா ராமா ஆட்ரா பாமா.. அழ வைத்த கிளைமாக்ஸ்!
சென்னை : கமல் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படம் தான் மூன்றாம் பிறை.
இந்த திரைப்படத்தை மற்ற திரைப்படங்களை போல அவ்வளவு எளிதாக கடந்த விட முடியாது. ஏன் என்றால் இதன் தாக்கம் இன்றளவு இதயத்தில் ஒளிந்து கொண்டு இருக்கிறது.
இப்படத்தைப் பற்றித்தான் Flashback.. பகுதியில் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

பாலுமகேந்திரா
1982ம் ஆண்டு இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மூன்றாம் பிறை. இசைஞானி இளையராஜா இசையமைத்து இப்படத்திற்கு மேலும் மெருகேற்றி இருந்தார். திரையரங்கில் 300 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம் என்ற பெருமையை இத்திரைப்படம் பெற்றுள்ளது.

விஜி
இது காதல் கதை தான் என்றாலும் இதில் சீனுவாக கமலும், விஜியாக ஸ்ரீதேவியும் வாழ்ந்து இருப்பார்கள் என்று தான் சொல்ல வேண்டும். விபத்தால் குழந்தையாக மாறிய ஸ்ரீதேவியின் சேட்டைகளையும், அழகையும் காண இரண்டு கண்கள் போதாது என்று தான் சொல்ல வேண்டும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. அழகும், திறமையையும் ஒருங்கே அமையப்பெற்ற பிரத்யேகமான நடிகை ஸ்ரீதேவி.

நடிப்பு ராட்சசன்
கமல் ஒரு நடிப்பு ராட்சசன் என்பதை நிரூபித்த திரைப்படங்களின் வரிசையில் இந்த திரைப்படமும் கைகோர்த்துக் கொண்டு நிற்கும். ஊட்டி , கமல், ஸ்ரீதேவி என இவற்றை சுற்றியே கதை நகர்ந்தாலும் பாலுமகேந்திராவின் கை வண்ணத்தால், ஒவ்வொரு காட்சியிலும் ஊட்டி வெவ்வேறு அழகாக தெரியும்.

தேசிய விருது
இப்படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமலுக்கும், சிறந்த இயக்குனருக்கான விருதை பாலுமகேந்திராவிற்கும் பெற்றுத்தந்தது. ஆனால் சிறந்த நடிகைக்கான விருது ஸ்ரீதேவிக்கு கிடைக்கவில்லை. இது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தியாகவே இருந்தது.

கண்ணதாசனின் கடைசி பாடல்
படத்தின் அழக்கு அழகு சேர்ந்தது இளையராஜாவின் இசை, பொன்மேனி உருகுதே, பூங்காற்று புதிரானது என்ற பாடலும், கண்ணதாசனின் கடைசி பாடலாக அமைந்த கண்ணே கலைமானே பாடலை கேட்காத காதுகளும் இல்லை, உச்சுகொட்டாத வாய்களும் இல்லை.

வெற்றி கிளைமாக்ஸ்
இந்த திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தான் பிரதானமாகவே இருந்தது. ஒரு வேளை, கிளைமாக்ஸ் வேறு விதமாக அமைந்து இருந்தால், அதாவது ஸ்ரீதேவியும் கமலும் சேர்ந்து இருந்தால் இத்திரைப்படம் வெற்றி பெற்று இருக்குமா என்றால், அது சந்தேகமே...அந்த திரைப்படத்தில் பல காட்சிகள் வந்தாலும், இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும், கண்ணைவிட்டு மறையாமல் இருப்பது அந்த கிளைமாக்ஸ் காட்சிதான். ஒரு கனத்த இதயத்தோடு திரையரங்க இருக்கையில் அமரவைத்ததும் அந்த காட்சிதான்.


Click it and Unblock the Notifications











