Flashback.. நான் ஆளான தாமரை... பாக்யராஜால் ஹிட்டடித்த "இது நம்ம ஆளு“
சென்னை : பாக்யராஜ் நடித்து வெற்றி பெற்ற இது நம்ம ஆளு திரைப்படத்தை பற்றி "Flashback" பகுதியில் பார்க்கலாம்...
80களில் பாக்கியராஜ் திரைப்படம் என்றால் மிகப்பெரிய மவுசு இருக்கும். முருங்கைக்காய் சீக்ரெட் போன்று ஏதாவது இருக்கும் என்று அவரது திரைப்படத்தை காண ரசிகர்கள் திரையரங்குக்கு அலை மோதுவார்கள். அப்படி வெளியாகி சூப்பரான மெசெஜூடன் வந்த திரைப்படம் தான் இது நம்ம ஆளு.
ஜாதியாவது, மதமாவது என்ற விஷயத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மிகவும் அழகாக நச்சுனு சொல்லி இருப்பார் பாக்கியராஜ். படித்த இளைஞரான பாக்கியராஜ் வயிற்று பிழைப்புக்காக பிராமண வேஷம் போட்டு கடைசியில் ஸ்வாஹ சொல்லத்தெரியாமல் சாஸ்திரிகளிடம் மாட்டிக்கொண்டு ஸ்வாஹ ஆகிவிடுகிறார்.

நேக்கான லாஜிக்
ஷோபனாவை திருமணம் செய்து கொள்ள டுபாக்கூர் அம்மா, அப்பாவை அழைத்து மாட்டிக்கொள்ளும் காட்சியிலும், இனி பெண்ணைத் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்யும் காட்சியிலும் தனக்கே உரித்தான லாஜிக்கை நேக்காக பயன்படுத்தி இருப்பார் பாக்கியராஜ்.

சாதிக்கு சவுக்கடி
பிற்படுத்தப்பட்ட பெண் , பிராமண வீட்டுக்குழந்தைக்கு தாய்பால் கொடுத்ததை ஞானசம்பந்தரை ஒப்பிட்டு ஊர் பஞ்சாயத்தில் வாய் பேசமுடியாத பெண்ணுக்காக பேசி உதவி செய்வார். இப்படி சின்ன சின்ன விஷயத்திலும் தன் எதார்த்தத்தை புகுத்தி சாதிக்கு சரியான சவுக்கடி கொடுத்து இருப்பார் பாக்யராஜ்.

படத்திற்கு பிளஸ்
சாஸ்திரிகளாக மிரட்டி இருப்பார் சோமயாஜுலு, நடிப்பில் அப்படி ஒரு கம்பீரம் இருக்கும். க்ளைமாக்ஸில் சோமயாஜுலு திருந்திவிடுவார் என்பது நமக்கு தெரிந்து இருந்தாலும், கதையை கொண்டு சென்ற விதம் மெச்சும்படியாக இருக்கும். பற்றி எரியும் வீட்டிலிருந்து சோமயாஜுலுவை காப்பாற்றிவிட்டு பாக்கியராஜ் பேசும் வசனமும், ஸ்ரீமடம் எரிந்ததில் சாதியும், மதமும் எரிந்ததை சொல்லாமல் சொன்னவிதமும் படத்திற்கு மற்றுமொரு பிளஸ்.

சொந்த குரலில் பாடினார்
இந்த திரைப்படத்திற்கு பாக்யராஜ் முதன்முறையாக இசையமைத்து இருந்தார். அம்மாடி இது தான் காதலா... நான் ஆளான தாமரை... சங்கீதம் பாட கேள்வி ஞானம் என அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. மேலும், அப்படத்தில் இடம் பெற்ற பச்சை மலை சாமி ஒண்ணு என்ற பாடலை தனது சொந்த குரலில் பாடி ஹிட் கொடுத்தார் பாக்கியராஜ்.

மிகப்பெரிய ஹிட்
1988ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை பாலகுமாரன் இயக்கி இருந்தார். கே.கோபிநாதன் தயாரித்திருந்தார். பாக்கியராஜ், சோபானா, சோமயாஜூலு, குமரி முத்து, மனோரமா, ஜானகி என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜாதிப்பிரிவினையைச் சொன்ன இந்த திரைப்படம் மிகப்பிரமாண்டமான வெற்றியை பெற்றதற்கு நம்ம ஆளு பாக்கியராஜ் தான் காரணம் என்றால் அது மிகையல்ல.


Click it and Unblock the Notifications











