கொஞ்சம் பிளாஷ்பேக்: ஷூட்டிங் தொடங்கியும் அந்த சூப்பர்ஹிட் பட ஹீரோ வாய்ப்பை இழந்த பிரபல நடிகர்!
சென்னை: அந்த சூப்பர் ஹிட் படத்தில் அறிமுகமாக வேண்டிய வாய்ப்பு, பைனான்ஸ் பிரச்னையால் மற்றொரு ஹீரோவுக்கு சென்றது.
Recommended Video
இப்படித்தான் நடக்கும் என்று ஒரு கணக்குப் போட்டு இறங்கினால், சினிமா வேறு கணக்கு வைத்திருக்கும்.
நாம் போடும் கணக்குக்கும் சினிமா போடும் கணக்குக்கும் கண்டிப்பாக இருக்கிறது ஆயிரம் வித்தியாசங்கள்.

வெவ்வேறு அனுபவங்கள்
சினிமா படங்களில் கதை இருக்கிறதோ, இல்லையோ, அந்தப் படங்களுக்குப் பின்னுள்ள கதைகளே ஒரு படத்துக்கான கதையை மொத்தமாகக் கொண்டிருக்கும். அப்படி பல படங்களில் மறைந்து கிடக்கின்றன, வெளியில் தெரியாத வெவ்வேறு அனுபவங்கள். சினிமா அப்படித்தான். அது எந்த கணக்குக்கும் சிக்காத மாயக் கணக்கு. திடீரென்று ஒருவரை உயர்த்தும். உயர்ந்த ஒருவரை தாழ்த்தும். சிலருக்கான காலத்தை மாற்றும்.

மோகமுள் அபிஷேக்
அப்படித்தான் பல அறிமுகங்கள் தள்ளிப் போயிருக்கின்றன. அதில் ஒன்று மோகமுள் அபிஷேக்கின் அறிமுகம். ஆர்.பாலு இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான படம், காலமெல்லாம் காதல் வாழ்க. முரளி ஹீரோவாக நடித்தார். கவுசல்யா இதில்தான் ஹீரோயினாக அறிமுகமானார். ஜெமினி கணேசன், மணிவண்ணன், சார்லி, விவேக் ஆகியோரும் நடித்துள்ளனர்.

காதல் என்னவானது
அப்போதைய, டாப் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் தயாரித்தார். இசைத் திறமை கொண்ட கல்லூரி மாணவன் முரளி. அவனது குரலை, போனில் பாராட்டுகிறார் பணக்கார வீட்டுப் பெண் கவுசல்யா. அதை காதல் என நினைக்கிறார் முரளி. அந்தப் பெண்ணை பார்க்க நினைக்கிறார். பார்த்தாரா, அவர் காதல் என்னவானது என்கிற காதல் கதை. தேவாவின் இசையில் இதன் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்தார்.

அறிமுகமாக இருந்தார்
இந்தப் படம் 275 நாட்களுக்கு மேல் ஓடி சாதனைப் படைத்தது. கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் நடிப்பில் 'குசலவே சேமவே' என்ற பெயரில் ரீமேக் ஆகி அங்கும் ஹிட்டானது. இந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக நடித்தது அபிஷேக். மும்பையில் நாடக நடிகராக இருந்த அபிஷேக், இதில்தான் அறிமுகமாக இருந்தார். படத்துக்கு உன் நினைவாக என்று டைட்டில் வைத்திருந்தோம்.

சிவசக்தி பாண்டியன்
12 நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் படம் கைவிடப்பட்டது. ஏனென்றால் தயாரிப்பாளரால் பணம் புரட்ட முடியவில்லை. பிறகு எப்படி இதற்குள் முரளி வந்தார்? என்று இயக்குனர் ஆர்.பாலுவிடம் கேட்டோம். 'அதுவும் ஒரு கதைதான். அந்த தயாரிப்பாளர் வெளிநாட்டை சேர்ந்தவர். அவரால் ஒரு கட்டத்துக்கு மேல் பணப் பிரச்னை. பிறகு சில மாதங்களுக்குப் பிறகு சிவசக்தி பாண்டியன் தயாரிக்க முன் வந்தார்.

பேசுகிறார்கள்
முரளியை ஹீரோவாக நடிக்க வைத்தோம். படத்தின் கதை மீது எல்லோருக்குமே நம்பிக்கை இருந்தது. பெரிய ஹிட்டானதில் மகிழ்ச்சி. இப்போது கூட எங்காவது அந்த படத்தையோ பாடலையோ டிவியில் ஒளிபரப்பினால் பார்த்துவிட்டு நிறைய பேர் பேசுகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது' என்கிறார் இயக்குனர் ஆர்.பாலு.

கதைத் திருட்டு
இவரது இந்தக் கதையைதான் இயக்குனர் அகத்தியன் திருடி, காதல் கோட்டையை உருவாக்கினார் என்று அந்த காலகட்டத்தில் பரபரப்பு புகார் எழுந்தது. அதற்காகத்தான் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு இந்த பட வாய்ப்பைக் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. அது பற்றி கேட்டால், 'பழைய விஷயங்களை பேசி ஒன்னும் நடக்கப் போவதில்லை, வேண்டாம்' என்கிறார் பாலு.


Click it and Unblock the Notifications











