பிளாஷ்பேக்: ரொமான்ஸ் மூட் வரவில்லை என்பதற்காக படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஹீரோயின்!
சென்னை: ரொமான்ஸ் மூட் வரவில்லை என்பதற்காக படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் முன்னாள் ஹீரோயின் ஒருவர்.
சினிமாவில் இன்று உயரத்தில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் எளிதில் கிடைத்ததில்லை அந்த இடம்.
அந்த இடத்தைப் பெறுவதற்காக, அவர்கள் சந்தித்திருக்கிற போராட்டங்கள், அவமானங்கள், தோல்விகள் ஏராளம்

'வெண்ணிற ஆடை' நிர்மலா
ஒவ்வொரு முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் இருக்கிறது இதுபோன்ற ஏதாவது பின்னணி. அப்படி, முதல் படத்திலேயே நிராகரிக்கப்பட்டு பின்னர் பிரபல ஹீரோயின் ஆன நடிகையின் பிளாஷ்பேக் இது. அந்த நடிகை, முன்னாள் ஹீரோயின் நிர்மலா! ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை' படத்தில் அறிமுகமானதன் மூலம் 'வெண்ணிற ஆடை' நிர்மலா எனும் பெயரில் அறியப்படுகிறவர்.

அரண்மனை குடும்பம்
கும்பகோணத்தில், நிர்மலாவின் குடும்பத்துக்கு 'அரண்மனை குடும்பம்' என்று பெயர். மன்னர் ராஜராஜசோழனோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததாம் அவர்கள் குடும்பம். அந்த குடும்பத்தில் இருந்து சென்னைக்கு நாட்டியம் கற்க வந்தவர் நிர்மலா. நடிகை வைஜயந்திமாலாவின் பள்ளியில் நாட்டியம் கற்ற பிறகு, கும்பகோணத்தில் நாட்டிய அரங்கேற்றம்.

சினிமா மேக்கப்மேன்
அப்போது அவருக்கு நாராயணசாமி என்பவர் மேக்கப் போட்டார். அவர் சினிமா மேக்கப்மேன். அவர், 'உங்க மகளை சினிமாவில் நடிக்க வைக்கலாம், பணமும் புகழும் கொட்டும்' என்று அவர் அப்பாவிடம் சொல்ல, என் மகளை வச்சு நானே படம் தயாரிக்கிறேன் என்று பணத்தோடு சென்னைக்கு வந்தார் நிர்மலாவின் அப்பா . பண்டரிபாய் ஹீரோயினாக நடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

காதலிக்க நேரமில்லை
கதை விவாதம் எல்லாம் முடிந்தபிறகு, அவர் உறவினர்கள், நம் குடும்பத்துக்கு சினிமா சரியாக வராது, அது வேண்டாம் என்று கறாராகச் சொல்ல, படம் டிராப். இதையடுத்து ஶ்ரீதரின், காதலிக்க நேரமில்லை படத்தில் வாய்ப்பு கிடைத்தது நிர்மலாவுக்கு. அந்தப் படத்தில் வரும் 'அனுபவம் புதுமை..' என்ற பாடல் காட்சியை படமாக்கினார்கள். முதல் படம், முதல் ஷூட்டிங் என்பதால், பதட்டம்.

ரொமான்ஸ் மூட்
அந்த பாடல் காட்சியில் ரொமான்டிக் மூடில் நடிக்க வேண்டும். ஆனால் ரொமான்ஸ் மூட் வரவில்லை, நிர்மலாவுக்கு. பல டேக் சென்றும் ரொமான்ஸை கொண்டு வர முடியவில்லை நிர்மலாவால். பிறகு ஶ்ரீதர், 'இந்தப் பாட்டுக்கு காதல் எக்ஸ்பிரஷன் ரொம்ப முக்கியம். உனக்கு வரலை. அடுத்தப் படத்துல பார்க்கலாம்' என்று சொல்லிவிட்டார்.

திருமணம் செய்யவில்லை
மனதொடிந்த நிர்மலா வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால், சொன்னதைக் காப்பாற்றினார் ஶ்ரீதர். அந்தப் படத்துக்கு பிறகு 'வெண்ணிற ஆடை' படத்தை ஶ்ரீதர் ஆரம்பிக்கும்போது, நிர்மலாவை அழைத்தார். சொன்னபடியே அவருக்கு அதில் ஒரு கேரக்டர் கொடுத்தார். நடிகர் ஶ்ரீகாந்தின் காதலி கீதாவாக நடித்திருந்தார் அதில். அந்தப் படம் அவருக்கு பெயரையும் புகழையும் கொடுத்தது.

ஜெயலலிதா
இந்தப் படத்தில், மூர்த்தி உள்பட சில புதுமுகங்கள் அறிமுகமானார்கள். அதில் ஒருவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. தமிழைத் தவிர, மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ள 'வெண்ணிற ஆடை' நிர்மலா, சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











