வனத்துறையிடம் வசமாக மாட்டிய காமெடி நடிகர் ரோபோ ஷங்கர்.. காரணம் என்ன தெரியுமா?
சென்னை: பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் அனுமதி இல்லாமல் வளர்த்த கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து கிண்டியில் இருக்கும் தேசிய சிறுவர் பூங்காவில் விட்டனர்.
கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ ஷங்கர். விஜயகாந்த் போல் அச்சு அசலாக உடல்மொழியையும், மிமிக்ரியையும் கொடுத்து அதகளமும் செய்தார். சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கேற்ப திரைப்படங்களிலும் அறிமுகமானார் ரோபோ ஷங்கர்.

ரோபோ ஷங்கருக்கு குவிந்த பட வாய்ப்புகள்
அதன்படி தனுஷுடன் மாரி, எழில் இயக்கத்தில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் என தொடர்ந்து பல படங்களில் நடித்த ரோபோ ஷங்கர் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தார். சின்னத்திரை போலவே வெள்ளித்திரையிலும் ரோபோ தனது முத்திரையை பதித்திருக்கிறார்.

ரோபோவை கடிந்துகொண்ட பார்த்திபன்
இந்தச் சூழலில் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பார்த்திபனும், ஏ.ஆர்.ரஹ்மானும் அமர்ந்திருந்தபோது பார்த்திபனின் மைக் வேலை செய்யாமல் போக உடனடியாக மேடையில் இருந்தவாறு ரோபோ ஷங்கரை நோக்கி மைக்கை வீசியெறிந்து கடிந்துகொண்டார் பார்த்திபன். இந்தச் சம்பவம் அந்த சமயத்தில் பேசுபொருளானது.

ரோபோ ஷங்கருக்கு கமல் ஹாசன் கொடுத்த முத்தம்
ரோபோ ஷங்கர் அடிப்படையில் தீவிரமான கமல் ஹாசனின் ரசிகர். இதுதொடர்பாக பொதுவெளியிலும் அவர் பேசியிருக்கிறார். இதனையடுத்து ரோபோ ஷங்கரை சந்திக்க ஆசைப்பட்ட கமல் ஹாசன் ஆழ்வார்ப்பேட்டைக்கு அழைத்து முத்தம் ஒன்றையும் கொடுத்தார். அப்போது அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கிலும் இருந்தது.

வனத்துறையிடம் சிக்கிய ரோபோ ஷங்கர்
இந்நிலையில் ரோபோ ஷங்கர் சாலிகிராமத்தில் இருக்கும் தனது வீட்டில் இரண்டு அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்து வந்திருக்கிறார். ஆனால் அதற்குரிய அனுமதியை பெற்றிருக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது வீட்டுக்கு சென்ற வனத்துறையினர் கிளிகளை கைப்பற்றி கிண்டி தேசிய சிறுவர் பூங்காவில் விட்டனர்.

திரைத்துறையில் ஜொலிக்கும் ரோபோ ஷங்கரின் மகள்
இதற்கிடையே ரோபோ ஷங்கர் மட்டுமின்றி அவரது மகளும் திரைத்துறையில் இருக்கிறார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான பிகில் படத்திலும், முத்தையா இயக்கத்தில் கார்த்தியும், அதிதி ஷங்கரும் நடித்த விருமன் படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் சில படங்களில் நடிப்பதற்கு அவர் கமிட்டும் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











