பாம்பு பிரச்னை.. அதுக்கு ஆதாரம் இருந்தா காட்டுங்க.. சிம்புவுக்கு வனத்துறை மீண்டும் நோட்டீஸ்!
சென்னை: நடிகர் சிம்புவுக்கு வனத்துறை சார்பில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், ஈஸ்வரன். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.
கிராமத்துப் பின்னணியில் இந்தப் படம் உருவாகி உள்ளது. 33 நாட்களில் ஷூட்டிங்கை முடித்துள்ளனர்.

நிதி அகர்வால்
இதில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயின். மற்றொரு ஹீரோயினாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். பால சரவணன், முனீஷ்காந்த் உள்பட பலர் நடிக்கின்றனர். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார்.

சர்பிரைஸ் சிம்பு
இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகி இருக்கிறார். ஷூட்டிங் முடிவடைந்ததும், படத்தில் பணியாற்றிய 400 பேருக்கும் சர்பிரைஸ் கொடுத்திருக்கிறார், சிம்பு. அதாவது தீபாவளி பரிசாக, ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசுகளை வழங்கியுள்ளார்.

மாநாடு ஷூட்டிங்
தன்னுடன் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கி இருக்கிறார். ஈஸ்வரன் ஷூட்டிங் முடிவடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் டப்பிங் பணியை தொடர்ந்த சிம்பு, அதையும் முடித்துவிட்டதாகக் கூறிய சிம்பு, தனது அடுத்த படமான, மாநாடு பட ஷூட்டிங்கில் பங்கேற்றார்.

பாம்பு போஸ்டர்
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது. அதில் நடிகர் சிம்பு தனது கழுத்தில் பாம்பு ஒன்றைப் போட்டிருப்பது போல போஸ்டர் வெளியானது. இதையடுத்து, மரத்தில் இருக்கும் பாம்பை நடிகர் சிம்பு பிடித்து சாக்கு பையில் போடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

வன விலங்கு ஆர்வலர்
இந்நிலையில், இந்த காட்சியில் வனவிலங்கை துன்புறுத்துவதாகவும், இதனால் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ள சிம்பு, இயக்குனர் சுசீந்திரன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வன விலங்கு நல ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கிண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார்.

பிளாஸ்டிக் பாம்பு
ஆனால் சிம்பு கழுத்தில் போட்டு இருப்பது பிளாஸ்டிக் பாம்பு என்றும் அதை வீடியோவில் நிஜ பாம்பு போல கிராபிக்ஸ் செய்யப்பட்டு இருப்பதாகவும் வனத்துறையிடம் இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்தார். இந்நிலையில், அதற்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி வனத்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.

2-வது முறை நோட்டீஸ்
ஆனால் அதற்கான ஆவணங்களைத் தரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கிண்டி வனத்துறையினர் இது தொடர்பாக சிம்பு வீட்டுக்கு நேரில் சென்று 2-வது முறையாக நோட்டீஸ் வழங்கியுள்ளனர். சுசீந்திரன் உள்பட படக்குழுவினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆவணங்களை தராவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











