அந்தர் பல்டி அடித்த நடிகை…முன்னாள் அமைச்சர் மீதான வழக்கில் திடீர் திருப்பம்!
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகார் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மலேசிய நாட்டை பூர்வீகமாக கொண்டவர் நடிகை சாந்தினி. இவர் சென்னை பெசன்ட் நகரில் தனியாக வசித்து வருகிறார். 36 வயதான இவர் நாடோடிகள் உட்பட 5 தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சாந்தினி நடிகை மட்டுமில்லாமல், மலேசிய சுற்றுலா துறையிலும் பணிபுரிந்து வருகிறார்.

நடிகை சாந்தினி
நடிகை சாந்தினி கடந்த ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம்.

3 முறை கருவை கலைத்தேன்
3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று புகார் தெரிவித்திருந்தார். இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பெங்களூரில் கைது
இந்த நிலையில் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்தார்.

வழக்கு தள்ளுபடி
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நடிகை சாந்தினி புகாரை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











