அந்த படத்தின் கேசட்டை வாங்கி திரும்பத் திரும்ப பார்க்கின்றேன்.. எம்.ஜி.ஆர்., ருசீகரப் பேச்சு!
சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் மட்டும் இல்லாமல் தமிழ்நாடு அரசியல் களத்திலும் தான் இருந்தவரை மன்னாதி மன்னாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன். தமிழ் சினிமாவிற்குள் மக்கள் திலகம் என அழைக்கப்பட்ட நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன், கருணாநிதியுடன் ஏற்பட்ட நட்பினால், காங்கிரஸ் கட்சியில் இருந்து திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அண்ணா திமுகவை தோற்றுவித்தபோது, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அண்ணா, மறைவுக்குப் பின்னர் திமுகவில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்., அதன் பின்னர் அதிமுக என்ற கட்சியைத் தோற்றுவித்ததுமட்டும் இல்லாமல், தான் எதிர்கொண்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். இந்நிலையில் முதலமைச்சராக இருந்தபோது அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதில் அவர், முந்தானை முடிச்சு படத்தைப் பார்த்தேன். படத்தயாரிப்பாளர் சரவணனிடம் கேட்டு படத்தின் வீடியோ கேசட்டையும் வாங்கி வைத்திருக்கின்றேன். அடிக்கடி போட்டும் பார்க்கின்றேன். அடிக்கடி ஏன் எனக் கேட்கக் கூடாது. ஏனென்றால், முந்தானை முடிச்சு படத்தில் பல்வேறு கருத்துக்கள் ஊன்றி உள்ளன" என பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் உலா வருகின்றது.
முந்தானை முடிச்சு: முந்தானை முடிச்சு படம் இயக்குநர் பாக்யராஜ் இயக்கி நடித்த படம். இந்த படம் 1983ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் அமைக்கப்பட்டிருந்த நகைச்சுவைக் காட்சிகளுக்காகவும் செண்டிமெண்ட் காட்சிகளுக்காகவும் மக்கள் வெள்ளம் போல திரண்டு வந்த தியேட்டரில் படத்தை பார்க்கத் தொடங்கினர். இந்தப் படம் கிட்டத்தட்ட 200 நாட்களைக் கடந்து ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

பிரமாண்ட வெற்றி: வெறும் மூன்று லட்சம் பட்ஜெடில் உருவாக்கப்பட்ட இந்த படம் 200 நாட்களைக் கடந்து ஓடியதால் படம் ரூபாய் 40 லட்சம் வசூல் செய்தது. ஏ.வி.எம் தயாரிப்பில் வெளியான இந்த படம் வெள்ளி விழா கண்ட படங்களின் வரிசையில் இணைந்தது. இந்த படத்தின் 200வது நாள் கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், அன்றைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் கலந்து கொண்டு படக்குழுவினரைப் பாராட்டிப் பேசினார்.

அடிக்கடி பார்க்கும் படம்: அப்போது, முந்தானை முடிச்சு படத்தைப் பார்த்தேன். படத்தயாரிப்பாளர் சரவணனிடம் கேட்டு படத்தின் வீடியோ கேசட்டையும் வாங்கி வைத்திருக்கின்றேன். அடிக்கடி போட்டும் பார்க்கின்றேன். அடிக்கடி ஏன் எனக் கேட்கக் கூடாது. ஏனென்றால், முந்தானை முடிச்சு படத்தில் பல்வேறு கருத்துக்கள் ஊன்றி உள்ளன. மேலும் முந்தானை முடிச்சு என்பது பிரம்ம முடுச்சு எனப்படுகின்றது. இது மக்களுக்கும் திரைத்துறையினருக்கும் இடையே போடப்பட்ட முடுச்சு என நான் கூறுவேன். படம் 250 நாட்கள் கடந்து ஓடவும், ஒரு வருடம் கடந்து ஓடவும் வாழ்த்துகள் என பேசினார். இந்த வீடியோ இணையத்தில் உலா வருகின்றது.


Click it and Unblock the Notifications











