Chiyaan Vikram - உயிரை கொடுத்து நடித்து என்ன பலன்.. விக்ரம் உழைப்பை உறிந்து ஏமாற்றத்தை கொடுத்த 4 படங்கள்
சென்னை: Chiyaan Vikram (சியான் விக்ரம்) நடிகர் சியான் விக்ரம் இன்று தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சமயத்தில் அவர் உயிரை கொடுத்து நடித்திருந்தாலும் சறுக்கிய அவரது நான்கு படங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். பல வருட போராட்டத்துக்கு பிறகு சேது படத்தின் மூலம் அடையாளப்பட்டார் அவர். அந்தப் படம் ரிலீஸான பிறகு விக்ரமின் கிராஃப் உச்சம் சென்றது. எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடக்கூடிய ஆற்றல் உடைய விக்ரமுக்கு ஹேட்டர்ஸே இல்லை. அப்படி ஹேட்டர்ஸ் இல்லாத மிக மிக சில நடிகர்களில் விக்ரமும் ஒருவர்.
இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை: சேது படத்திலிருந்தே தனது நடிப்பில் தீவிரம் காட்டியவர் அவர். ஒருபக்கம் கதையம்சம் உள்ள படங்கள், மறுபக்கம் கமர்ஷியல் படங்கள் என இரட்டை சவாரியை மிக தெளிவாக செய்தவர். குறிப்பாக நடிப்புக்கு தீனி போடும் படங்களில் விக்ரமின் நடிப்பை பார்த்து மிரளாதவர்களே இல்லை.
உடல் எடையை கூட்டுதல், குறைத்தல், கெட்டப் சேஞ்ச் என எதுவாக இருந்தாலும் அதகளம் செய்பவர். ஆனால் அவருக்குரிய அங்கீகாரம் இன்னமும் கிடைக்கவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்து. விக்ரம் உயிரைக் கொடுத்து உழைத்து நடித்தாலும் சில படங்கள் அவரது உழைப்பை உறிஞ்சி சறுக்கவே செய்தன. அப்படி சறுக்கிய நான்கு படங்களை கீழே காணலாம்.

தெய்வத்திருமகள்: ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான படம்தான் தெய்வத்திருமகள். கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான இப்படத்துக்கு முதலில் தெய்வத்திருமகன் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சில பிரச்னைகளால் தெய்வத்திருமகள் என்று மாற்றப்பட்டது. கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். மன நலம் பிறழ்ந்தவராய் அவர் காட்டிய நடிப்பை பார்த்து கலங்காதவர்களே இல்லை. குறிப்பாக, அப்படத்தில் அவருக்கு மகளாக பேபி சாரா நடித்திருப்பார்.
படத்தின் க்ளைமேக்ஸில் நீதிமன்றத்தில் நிலா (பேபி சாரா), கிருஷ்ணா (விக்ரம்) ஆகியோர் சைகையில் பேசிக்கொள்ளும் காட்சி வலி மிகுந்த கவிதை போல் இருக்கும். அந்தக் காட்சியை பார்க்கும்போது பேபி சாரா குழந்தையா, இல்லை விக்ரம் குழந்தையா என்று தோன்றும். அந்த அளவுக்கு குழந்தையாக மாறி நடித்திருப்பார் விக்ரம். மிகப்பெரிய ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்பட்ட அப்படம் சுமாரான வரவேற்பை பெற்று ஏமாற்றத்தையே கொடுத்தது.

சறுக்கிய ஷங்கரின் ஐ: அந்நியன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரம் - ஷங்கர் கூட்டணி ஐ படத்தின் மூலம் மீண்டும் இணைந்தது. லிங்கேஸ்வரன் என்ற லீ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விக்ரம். பாடி பில்டராக இருக்கும்போது கட்டுக்கோப்பான உடலோடு தோன்றிய அவரை பார்க்கும்போது மனுஷன் இதற்கெல்லாம் எவ்வளவு ஒர்க் அவுட் செய்திருக்க வேண்டும் என்ற ஆச்சரியமே தோன்றும். அப்படியே மாடலிங்கிற்குள் செல்லும்போது அவ்வளவு ஸ்டைலிஷாக தனது லுக்கை, நடிப்பை மாற்றியிருப்பார் விக்ரம்.
பிறகு வில்லன்கள் செய்த சதியால் உடலில் சில மாற்றங்கள் நிகழும்போது விக்ரமின் கூன் விழுந்த உடலையும், கொப்பளம் வந்த முகத்தையும் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக கோயில் வாசலில் ஏமி ஜாக்சன் விக்ரமுக்கு ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு செல்லும் காட்சியில் விக்ரமின் நடிப்பு அவ்வளவு அசுரத்தனமாக இருக்கும். ஒரே படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளிலும், அதில் தனது நடிப்பிலும் கெத்து காட்டிய ஐ படமும் விக்ரமின் உழைப்பை உறிஞ்சி ஏமாற்றத்தை கொடுத்தது.

கந்தசாமி: சுசிகணேசன் இயக்கத்தில் உருவான படம்தான் கந்தசாமி. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படம் கந்தசாமி. கந்தசாமி என்ற சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்றிருப்பார் விக்ரம். சிங்கிள் ஆக்ட்தான் என்றாலும் படத்தில் கந்தசாமி கெட் அப், பெண் கெட் அப் என பல வேடங்கள் போட்டு கலக்கியிருப்பார்.
கமல் ஹாசன், சிவாஜி கணேசனுக்கு பிறகு ஒரே படத்தில் அதிக கெட் அப்களை போட்ட நடிகர் என்ற பெருமையை விக்ரம் பெற்றார். இப்படி ஒரு பெருமை விக்ரமுக்கு கிடைத்தாலும் அவரது உழைப்பையெல்லாம் வீணாக்கி படம் ஏமாற்றத்தையே கொடுத்தது.

விக்ரமை கொத்திய கோப்ரா: கெட் அப் சேஞ்ச் என்றால் கரும்பு சாப்பிட கூலி எதற்கு என்பதுபோல் அதை அசால்ட்டாக டீல் செய்யும் விக்ரமுக்கு அப்படி அமைந்த படம்தான் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தப் படத்தில், வெளிநாடுகளில் கொள்ளை அடிக்கப்போவது, கொலை செய்யப்போவது போன்ற காட்சிகளுக்காக விக்ரம் தனது கெட் அப்புகளை விதவிதமாக மாற்றினார்.
படத்தில் விக்ரமின் நடிப்புக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்தாலும் கோப்ரா படத்துக்கு ஆதரவை கொடுக்கவில்லை. இதனால் காலை சுற்றிய பாம்பாக கோப்ரா விக்ரமை பலமாகவே கொத்தி தோல்வியையே கொடுத்தது.


Click it and Unblock the Notifications











