7 லட்ச ரூபாயில் வீடு.. 50 ஆயிரம் முன்பணம்.. பிரபல நடிகர் பெயரில் நடந்த பெரிய மோசடி அம்பலம்!
வீடு கட்டித் தருவதாக ராகவா லாரன்ஸ் பெயரில் நடந்த பணமோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நீலகிரி: வீடு கட்டித் தருவதாகக் கூறி நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில் ஊட்டியில் பண மோசடி நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் நடன இயக்குநராக தொடங்கி இன்று முன்னணி நடிகராக, இயக்குநராக இருந்து வருபவர் ராகவா லாரன்ஸ். தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து வரும் அவர், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவது, வீடற்றோருக்கு வீடு கட்டித் தருவது போன்ற சமூகசேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸின் பெயரைப் பயன்படுத்தி சில மோசடிப் பேர்வழிகள் அப்பாவி மக்களை வீடு கட்டித் தருவதாக ஏமாற்றிப் பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றத்தின் பொதுச் செயலாளர் சங்கர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு
அந்தப் புகாரில், ‘ஊட்டி காந்தள் கிராமத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகவா லாரன்ஸ் பெயரில் ஏழரை லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டித்தரப்படுவதாக சிலர் நம்ப வைத்துள்ளனர். இதற்காக சிலரிடம் முன்பணம் 50,000 ரூபாயும் அவர்கள் பெற்றுள்ளனர்.

புகார்
சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் அம்மோசடிப் பேர்வழிகளிடம் பணம் தந்து ஏமாந்ததாகத் தெரிகிறது. எனவே, பொய்த் தகவலைக் கூறி பிரசாரம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் ஆதாரம்
வாட்ஸ் அப் சேட்டிங் மூலம் தான் மோசடிக் கும்பல் அப்பாவி மக்களை ஏமாற்றியதாகத் தெரிகிறது. எனவே அது தொடர்பான ஆதாரங்களையும் போலீசாரிடம் நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றத்தினர் அளித்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ் வருத்தம்
இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்சின் கவனத்திற்கும் அவரது மக்கள் சேவை நற்பணி மன்றத்தினர் கொண்டு சென்றுள்ளனர். தனது பெயரில் மக்கள் ஏமாற்றப்பட்டது குறித்து ராகவா லாரன்ஸ் மிகவும் வேதனைப் பட்டதாகத் தெரிகிறது.

அறக்கட்டளை வேண்டுகோள்
ஏற்கெனவே அறக்கட்டளைக்கும் இதுதொடர்பான புகார்கள் வந்துள்ளனவாம். இதற்கு மேலும் இதுபோன்ற மோசடி நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளதாக ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றத்தினர் கூறியுள்ளனர். மேலும், உரிய ஆதாரங்கள் இல்லாமல் இது போன்ற மோசடிப் பேர்வழிகளின் வலையில் சிக்கி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











