‘களவாணி சிறுக்கி’.. வடிவேலு காமெடியைவிட மோசமா இருக்கே இந்தப் படக்கதை!
களவாணி சிறுக்கி பட டிக்கெட்டுக்கு கைலி இலவசமாக வழங்கப்பட உள்ளது.
சென்னை: களவாணி சிறுக்கி படத்துக்கான டிக்கெட் வாங்கினால் கைலி இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர்கள் சாமி ,திவாகர் ,அஞ்சு நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் களவாணி சிறுக்கி. இந்த படத்தை ரவி ராகுல் இயக்குகிறார்.
கிராமத்தில் நடக்கும் காதல் மோதல் தான் படத்தின் கதைக்களம். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

திருமண ஏற்பாடு:
கிராமத்தில் படித்துவிட்டு வீட்டில் இருக்கும் நாயகி கஸ்தூரியை ஊரில் வட்டி தொழில் செய்யும் அவரது தாய் மாமா மருதுவிற்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்கின்றனர். இந்நிலையில் அதே ஊரில் கறிக்கடை நடத்தும் பாண்டி என்பவரும் கஸ்தூரியை பெண் கேட்க பிரச்சனை ஏற்படுகிறது.

டாக்டருடன் காதல்:
இருவரும் நாயகிக்கு மீசையை முறுக்கி சவால்விட, இந்த கேப்பில் கடா வெட்ட பார்க்கிறார் கஸ்தூரியிடம் டியூஷன் படிக்கும் கதிர். இவர்கள் எல்லாம் ஒருபக்கம் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க 16 வயதினிலே சத்யஜித் போல ஊருக்கு வரும் டாக்டர் அரவிந்துக்கும் கஸ்தூரிக்கு காதல் மலருகிறது.

அக்டோபர் ரிலீஸ்:
பல பிரச்சனைகளுக்கு நடுவில் இவர்கள் இருவருக்கும் கல்யாணம் நடைபெறுகிறது .முதலிரவு நேரத்தில் அரவிந்த் இறந்துவிட, அவரை கொன்றது யார் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம் தான் களவாணி சிறுக்கி. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 5 ம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

கைலி பரிசு:
ரசிகர்கள் கூட்டம் இப்போது திரையரங்கில் குறைந்து கொண்டு வருவதால், இப்பட தயாரிப்பாளர் புது யுக்தி ஒன்றை கையாள முடிவு செய்துள்ளார். படம் வெளியாகும் அக்டோபர் 5,6,7 ஆகிய தேதிகளில் காலை காட்சிக்கு மட்டும் திரைக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ஒரு கைலி பரிசாக தர திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஆர்.நமச்சிவாயம். இதன் மூலம் ரசிகர்களும் திரைக்கு வருவார்கள் படமும் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் அவர்.


Click it and Unblock the Notifications











