ஆளப்போறன் தமிழன் முதன்முதலில் சொன்ன ரஹ்மான் முதல் தனுஷ் வரை விஜய்க்கு வாழ்த்து!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டார். தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக விஜய் உருவாக உள்ளார் என்பதால் திரைத்துறையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மெர்சல் படத்தில் விஜய்யை முதன் முதலாக ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் மூலம் கொண்டாடிய இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதில், " தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!

அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும், சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும் - ஏஆர் ரஹ்மான்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில், " களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று வாழ்த்தி உள்ளார்.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், " " நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். " என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது வாழ்த்தில், " தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையை பெற்று பெரு வெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications